Sunday, October 11, 2015

Divorce

Divorce
கணவன் மனைவி என்ற உறவை எந்த வார்த்தைகளாலும் அளந்துவிட முடியாது. ஒருமுறை திருமண உறவை ஏற்படுத்திவிட்டால், அவர்கள் சாகும்வரை அது மாறாது. இறப்புக்குப்பின்னும் அது தொடரும் என்பதே மேற்கத்திய கலாச்சாரம். அதையே தான் ஆசிய, குறிப்பாக இந்திய கலாச்சாரமும் பின்பற்றுகிறது. ஒரு சில சிறு நிலப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே, அவர்களின் விருப்பம்போல ஆண்-பெண் உறவில் இருக்கின்றனர். மற்றபடி உலகளாவிய மக்கள் வாழ்க்கையில், கணவன்-மனைவி உறவுமுறை என்பது ஒரு ஆத்மார்த்தமான உறவாகவே கருதி வந்துள்ளனர்.

இப்போது அந்த உறவில், உறவுப் பாலங்கள் சரியாக அமையாததால், அல்லது ஏற்படுத்திக் கொள்ளாததால், அத்தகைய ஆத்மார்த்த பந்தத்தை நம்பாததால், இந்த உறவுகளில் பெரும்பாலும் விரிசல் ஏற்பட்டு விடுகிறது.

டைவர்ஸ் என்பது இப்போது அதிகமாகி விட்டது. ஒத்தையடிப் பாதையாக சட்டங்கள் இருந்தபோது, ஒருசிலர் அதைத் தேடிப் போனார்கள். அது மண் ரோடாகி, தார் ரோடாகி, இப்போது 6வழி தேசிய சாலையாக ஆக்கி விட்டது டைவர்ஸ் சட்டங்கள்.  நிறைய சட்டங்கள் உள்ளதே தவிர, அங்கு தீர்வுகளைக் கொடுக்க திணற வேண்டி இருக்கிறது.  

சேர்ந்து வாழ்வதற்கு காரணங்கள் தேவையில்லை; பிரிய வேண்டும் என்றால், பிரிவதற்குறிய காரணங்களைச் சொல்ல வேண்டும் அந்தக் கோர்ட்டுக்கு. அதில் குறிப்பிட்டுள்ள காரணங்களை தேடிப்பிடித்து அதையும் ஊதிப் பெரிதாக்க வேண்டும். குறை கூறித்தான் பிரிவைப் பெற வேண்டும். இருவரும் சமாதானமாக பிரிய நினைத்தால், அதற்கு ஆறு மாதம் காத்திருக்க வேண்டும். பிரிவுத் துயரை அனுபவித்துவிட்டோம். இருந்தாலும் பிரிகிறோம் என்று கோர்ட்டுக்கு சொல்ல வேண்டும். அப்போதுதான் சமாதானமாக கொடுக்கும் டைவர்ஸ் கிடைக்கும்.

ஒப்பாத வாழ்க்கையைப் பிரித்துக் கொள்வதில், அல்லது பிரிந்து கொள்வதில் தப்பில்லை; அந்த ஒப்பாத வாழ்க்கையின் காலத்தில் ஏற்படுத்தி உறவுகளையும், பொருள்களையும் பிரிப்பதிலும், பிரிவதிலும் சிக்கல்களும் சிரமங்களும் அந்த ஆத்மாரத்த உறவையே, அல்லது அதுவரை வாழ்ந்த வாழ்க்கையின் நினைவுகளையே சிதைத்து சின்னா பின்னப் படுத்தி விடுகிறது.

இந்திய சட்டம், இன்னும், மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுத்து விரட்டும் நிலையிலேயே உள்ளது. அதை விட்டு மேம்படுத்தப்படவில்லை. மனைவி என்பவள் வாழ வந்தவள். எனக்குப் பிடிக்காவிட்டாலும், அவளுக்குப் பிடிக்காவிட்டாலும், நான் அவளை வெளியே அனுப்பிவிட முடியும். அதற்குறிய நஷ்டத்தைக் கொடுத்தால் போதும் என்று நினைக்கும்படி சட்டங்கள் உள்ளன. பிரியும் காலத்தில், அவளின் வாழ்க்கைக்கு தேவையான பணத்தை மொத்தமாகக் கொடுத்து விட்டால் போதும். அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளையும் இவ்வாறே பணம் கொடுத்த பிரித்து விடலாம். எல்லோராலும் தனித்து இயங்க முடியும். ஆனால் தனித்து வாழ முடியாது. உறவுப் பாலங்களே வாழ்க்கையை இயங்க வைக்கின்றன. அதையும் இனிமையுடன் இயங்க வைக்கின்றன.

ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வார்களாம். கணவன் மனைவியாக வாழ்வார்களாம். குழந்தைகளையும் பெற்றுக் கொள்வார்களாம். வீடு, நில புலன்களையும் சிலர் வாங்குவார்களாம். பணக்காரர்களும் சிலர் ஆவார்களாம். ஆனால், பிரிவு என்று வந்துவிட்ட பின்னர், பிரியும் மனைவிக்கு நஷ்டஈடுதான் தீர்வாம். இது இந்திய சட்டங்களின் இன்றைய நிலை.

இதை இங்கிலாந்து கோர்ட் 2000த்திலேயே, வேறு ஒரு கோணத்தில் அணுகி உள்ளது. அதை தீர்ப்பாகவும் கொடுத்துள்ளது. அதை ஒட்டியே இந்திய கோர்ட்டுகளும் அப்படியான சட்டங்களை ஏற்படுத்த தயாராகி விட்டது.
இங்கிலாந்து வழக்கு; White v. White.
இதில், Lord Nicholls பேசுகிறார்.....
"My Lords, Divorce creates many problems. One question always arises. It concerns how the property of the husband and wife should be divided and whether one of them should continue to support the other. Stated in the most general terms, the answer is obvious. Everyone would accept that the outcome on these matters, whether by agreement or court order, should be fair. More realistically, the outcome ought to be as fair as is possible in all the circumstances. But everyone's life is different. Features which are important when assessing fairness differ in each case. And, sometimes, different minds can reach different conclusions on what fairness requires. Then fairness, like beauty, lies in the eye of the beholder." . . .. . .. .

இந்த இங்கிலாந்து வழக்கின் விஷயம் இதுதான். . .. .
ஒரு விவசாயக் குடும்பத்துப் பெண்ணும், விவசாய குடும்பத்து பையனும் திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணத்துக்கு முன்பே அந்தப் பெண் விவசாய வேலைதான் பார்த்துக் கொண்டிருந்தார். திறமையான பெண். திருமணத்துக்குப்பின் இவரும் சேர்ந்து விவசாயம் பார்க்கிறார்கள். இறைவன் அவர்களுக்கு சொத்தை அதிகமாக்கி விட்டான். வருடாவருடம் அளவுக்குமீறி வருமானம். ஏராளமான நிலங்களை வாங்கி விட்டார்கள். அங்கு பண்ணை போலவே ஒரு லாட்டாக நிலங்கள் இருக்குமாம். பக்கத்துப் பண்ணையையே வாங்கி விட்டார்கள். இவர்கள் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது, இறைவன் இவர்களை விட்டுவிட்டு வேறு ஊருக்குப் போய்விட்டான் போல! இவருக்கும் மனவேறுபாடு. சண்டை. பெரிதாகிவிட்டது. கணவன் கோர்ட்டில் டைவர்ஸ் மனு போட்டு விட்டான். கீழ்கோர்ட்டில் டைவர்ஸ் உத்தரவு ஆகி விட்டது. அவன் மனைவிக்கு 8 லட்சம் பவுண்ட் வாழ்க்கை ஜீவனத்துக்கு கொடுத்து விடவேண்டும் என்று உத்தரவு. மனைவிக்கு கோபம். "எனக்குப் பணம் தேவையில்லை; அதை நான் உழைத்துச் சம்பாதித்துக் கொள்வேன்; இதுவரை என் கணவனுடன் சேர்ந்து நானும் உழைத்து, ஒரு பார்ட்னரைப் போல உழைத்து சேர்த்த சொத்தை என் கணவன் மட்டும் எடுத்துக் கொண்டு ஓடிவிட அனுமதிக்க மாட்டேன். அந்த சொத்தில் என் உழைப்பில் பாதி உள்ளது. எனவே சொத்தில் பாதி எனக்கு நியாயப்படி சேர வேண்டும்; அதை கொடுத்தால், டைவர்ஸ் கொடுக்கலாம்" என்று வாதம் செய்கிறாள். கீழ்கோர்ட் 8 லட்சம் பவுண்ட் ஜீவனாம்சம் போதும் என்று தீர்ப்பை எழுதிவிட்டது.

பிடிக்காத தீர்ப்பை எதிர்த்து மனைவி (அவள் பெயர் பமீலா ஒயிட்) அப்பீல் செய்கிறாள்.
1961ல் இவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அப்போது பமீலாவுக்கு 26 வயது. அவள் கணவன் மார்ட்டின் ஒயிட்க்கு 24 வயதுதான். இவர்கள் வாழ்ந்த வாழ்க்கையில் மூன்று குழந்தைகள் உள்ளனர். மூத்தமகள் ஒரு விமான விபத்தில் 1992ல் இறந்து விட்டாள். மற்ற இரு பிள்ளைகளின் பெயர் பிலிப், ஹிலாரி. 1994ல் கணவன் மனைவியின் பிரிவு ஏற்படுகிறது. (33 வருட வாழ்க்கைக்குப்பின்). இவர்கள் சேர்ந்து வாங்கிய ஒரு பண்ணையே சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பு. இப்படி பல சொத்துக்கள் உள்ளன. கோர்ட்டில் கணவன் சொல்கிறான், "நான் கொடுக்கும் பணத்தை வைத்து அவள் வேறு பண்ணையை வாங்கி விவசாயம் பார்த்துக் கொள்ளட்டும்; இந்த பண்ணைகள் என்னிடமே வைத்துக் கொள்வேன்; அதற்குறிய விடுதலைப்பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுத் தந்து விடட்டும்" என்பது அவன் வாதம்.

ஆனால் நீதிபதி, Holman J-யின் வார்த்தைகள் வேறாக உள்ளது அது.........
"Neither party had any earning capacity outside farming. Mrs. White's wish to have enough money to enable to buy a farm of her own was not a reasonable requirement. It was unwise and unjustifiable to break up the existing, established farming enterprise so that she could embark, much more speculatively, on another. Her housing and financial needs were a farmhouse type of home, with stabling and 25 acres of land for her horses, costing L425,000. She needed a net annual spendable income of L40,000. ........

அந்த அப்பீலில் 8லட்சம் பவுண்டிலிருந்து 1.5 மில்லியன் பவுண்டாக உயர்த்தி கொடுத்தார்கள். அதையும் அந்தப் பெண் ஏற்கவில்லை. பணம் தேவையில்லை; பங்குதான் வேண்டும் என்பது அவள் நியாயம்.

அதற்கு மேல் அப்பீல் கோர்ட்டான் "லார்டு கோர்ட்டுக்கு" அப்பீல் செய்கிறாள்.
"The statutory jurisdiction provides for all applications for ancillary financial relief, from the poverty stricken to the multi-millionaire. But there is one principle of universal application which can be stated with confidence. In seeking to achieve a fair outcome, there is no place for discrimination between husband and wife and their respective roles. Typically, a husband and wife share the activities of earning money, running their home and caring for their children. Traditionally, the husband earned the money, and the wife looked after the home and the children. This traditional division of labour is no longer the order of the day. Frequently both parents work. Sometimes it is the wife who is the money-earner, and the husband runs the home and cares for the children during the day."

இருவரும் உழைத்திருக்கிறார்கள். வீட்டில் இருக்கும் மனைவி கூட வீட்டை நிர்வாகம் செய்து வருகிறாள். அதுவும் ஒரு வேலையைப் போலத்தானே என்று கோர்ட் கேள்வியும் எழுப்பி உள்ளது.

எனவே மொத்த சொத்தில் மனைவிக்கு பாதிப் பங்கை பிரித்து கொடுத்துவிடுவதுதான் நியாயம் என்று தீர்ப்பை கொடுத்து விட்டது.

இப்போது இந்தியாவிலும் இப்படியான ஒரு சட்ட திருத்தத்தை மத்திய அரசு செய்து வைத்துள்ளது. இன்னும் நடைமுறைக்கு கொண்டுவரவில்லை. வரவேற்போம்.

**

No comments:

Post a Comment