Tuesday, August 2, 2016

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்-4

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்-4
(The Constitution of India, 1950)
அடிப்படை உரிமைகளைப் பற்றி சொல்லும்போது, பிரிவு 21 மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது;
பிரிவு: 21: ஒரு தனி மனிதனின் உயிருக்கும், அவன் சுதந்திரத்துக்கும் பங்கம் ஏற்படக் கூடாது; (சட்டத்தால் மட்டுமே சுதந்திரத்தை கட்டுப்படுத்த முடியும்);
Article: 21: “No person shall be deprived of his life or personal liberty except according to procedure established by law.
பல முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் இந்த பிரிவில்தான் சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்திருந்தன; அதில் முக்கியமான வழக்காக மேனகாகாந்தி வழக்கு உள்ளது; Maneka Gandhi v. Union of India, AIR 1978 SC 597.

மேனகாகாந்தி வழக்கு:
இது 1978-ல் சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கு; இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மொத்தம் ஏழு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்; அவர்கள் முறையே நீதிபதிகளான எம்.எச். பெக் (அப்போதைய இந்திய தலைமை நீதிபதி), ஒய்.வி. சந்திரசூட், பி.என்.பகவதி, வி.ஆர்.கிருஷ்ணய்யர், என்.எல்.பசல்அலி, பி.எஸ்.கைலாசம்.

வழக்கின் சாரம்:
மேனகா காந்திக்கு 1976-ல் பாஸ்போர்ட் வழங்கப் பட்டது; (மேனகாகாந்தி, சஞ்ஞய் காந்தியின் மனைவி; இந்திராகாந்தியின் மருமகள்). ஆனால் 1977-ல் டெல்லி பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து அவருக்கு ஒரு கடிதம் வருகிறது; அதில், அவரின் பாஸ்போர்ட் முடக்கப்படுகிறது என்று தகவல் உள்ளது; எனவே அவரின் பாஸ்போர்ட்டை, அரசிடம் 7 நாட்களுக்குள் ஒப்படைக்கும்படி கேட்கின்றனர்; (அப்போது இந்திராகாந்திக்கும் இவருக்கும் மனஸ்தாபம் இருக்கிறது என்று சொல்லப் படுகிறது); ஏன், என் பாஸ்போர்ட்டை முடக்கினீர்கள் என்று காரணம் கேட்கிறார்; அதற்கு, பப்ளிக் இன்ட்ரஸ்ட் அதாவது பொது நலன் கருதி முடக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்ற பதிலை அரசு கொடுக்கிறது;

மேனகா காந்தி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போடுகிறார்; அதில், இந்திய அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு 21-ன்படி, எனக்கு தனிமனித உரிமை உள்ளது; நான் எங்கு வேண்டுமானாலும் செல்ல உரிமை உண்டு; வெளிநாட்டுக்கும் போக உரிமை உண்டு; அதை தடுக்க அரசுக்கு அதிகாரம் இல்லை; அப்படித்தான் அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு 21-ல் சொல்லப் பட்டுள்ளது என்று கோர்ட்டில் வாதம் செய்கிறார் அவரின் வக்கீல்;

வெளிநாடு செல்வது என்பது ஒருவரின் தனிமனித சுதந்திரமா என்ற கேள்வியை சுப்ரீம் கோர்ட் முன்வைக்கிறது;

பிரிவு 21ல் கூறியுள்ள பெர்சனல் லிபர்ட்டி என்னும் தனிமனித உரிமை என்பது வெளிநாடு செல்வதற்குறிய உரிமையையும் குறிக்கும் என்றும், வேறு ஏதாவது சட்டம் இருந்து தடுத்தால் ஒழிய, தனி மனிதனை, அரசு, வெளிநாட்டுக்கோ, உள்நாட்டிலேயே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கோ இடம் பெயர்ந்து செல்வதை தடுக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் அந்த தீர்ப்பில் கூறியுள்ளது;

இந்த வழக்கின் தீர்ப்பு அப்போது மிகப் பிரபல்யமாகப் பேசப்பட்டது; இன்றும் இந்த தீர்ப்பு, பல வழக்குகளில் முன் வைத்து பேசப்படுகிறது; அந்த அளவுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக அமைந்து விட்டது;

**

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்-3

 இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்-3
(The Constitution of India, 1950)
இந்த சட்டத்தில் பிரிவு 368 என்பது ஒரு முக்கியமான பிரிவு என்றே நினைத்துக் கொள்ளலாம்; அது “பார்லிமெண்ட் விரும்பினால், இந்த அரசியல் சாசன சட்டத்தின் பிரிவுகளை மாற்றிக் கொள்ளவோ, திருத்திக் கொள்ளவோ, பார்லிமெண்டுக்கு அதிகாரம் உண்டு; அவ்வாறு திருத்தம் செய்ய வேண்டும் என்றால், அதை ஒரு சட்ட வரைவாக எழுதி, பார்லிமெண்டின் இரு சபைகளிலும் தாக்கல் செய்து, அதில் உள்ள எம்பிக்களில் மூன்றில் இரண்டு பங்கு எம்பிக்கள் ஓட்டை பெற்று, திருத்திக் கொள்ளலாம்” என்று கூறப்பட்டுள்ளது;
இப்படி இருந்த சட்டத்தைக் கொண்டு, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சில திருத்தங்களை செய்தார்; அதன்படி எமெர்ஜென்சி ஆட்சியை கொண்டு வந்தார்; குடிமகனின் அடிப்படை உரிமைகளை இந்த சட்டப்படி கிடைப்பதைத் தடுத்தார்; இந்த அரசியல் சாசன சட்டத்தை திருத்தம் செய்வதை, கேள்வி கேட்டு கோர்ட்டுக்கு போக முடியாது என்றும் சட்டம் இயற்றினார்; இதனால் பல கெடுதல்கள் வரும் என பின்னர் வந்த ஜனதா அரசு உணர்ந்து, அந்த பிரிவில் மேலும் சில உட்பிரிவுகளைக் கொண்டு வந்து கட்டுப்படுத்தியது;
அந்த உட்பிரிவுகள் என்னவென்றால்: அரசியல் சாசன சட்டத்தின் மூன்றாவது அத்தியாயமான குடிமகனின் அடிப்படை உரிமைகள் என்னும் பிரிவுகள் 14 முதல் 30 வரை உள்ள பிரிவுகள் அடங்கிய அத்தியாயம் மூன்றையும், அதில் உள்ள பிரிவுகளையும், திருத்தம் செய்வதற்கு பார்லிமெண்டுக்கு அதிகாரம் கிடையாது என்று சட்டத்தை கொண்டு வந்தனர்; அதன்படி, 1977 முதல் இந்த உட்பிரிவுகள் செயல்படத் தொடங்கின; எனவே, இப்போது, அந்த மூன்றாவது அத்தியாயத்தில் உள்ள பிரிவுகளை எந்த பார்லிமெண்டும் திருத்தம் செய்ய முடியாது; இதற்கு அடிப்படையான காரணம், சுப்ரீம்கோர்ட்டின் முன் தீர்ப்புகள்தான்! அந்த தீர்ப்பின் அடிப்படையிலேயே ஜனதா அரசும், அரசியல் சாசன சட்டத்தில் இதை நிரந்தரமாக எழுதி வைத்துவிட்டது; இனி எந்த அரசு வந்தாலும், அதை மாற்றிவிட முடியாது; கோர்ட்டும் அதை மாற்றுவதற்கு ஒப்புக் கொள்ளாது;  ஜனநாயக நாட்டின், குடிமகனின் அடிப்படை உரிமைகளை மாற்றிவிட, எந்த அரசுக்கும், அதிகாரம் இல்லை என்பது அதன் தத்துவம்!
**


அரசியல் அமைப்புச் சட்டம்-2

அரசியல் அமைப்புச் சட்டம்-2
(The Constitution of India, 1950)
இந்தச் சட்டத்தில் பிரிவு 14 முதல் 30 வரை, குடிமகனின் அடிப்படை உரிமைகளைச் சொல்லி உள்ளது; இது அத்தியாயம் 3-ல் வருகிறது; எனவே இந்த அரசியல் சாசனச் சட்டத்தில் அத்தியாயம் 3-என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது; பார்லிமெண்டுக்கும், கோர்ட்டுக்கும் சில நேரங்களில், ஏன், பல நேரங்களில் இந்த அத்தியாத்தில் குறிப்பிட்டுள்ளவற்றைப் பற்றித்தான் சண்டையே வருகிறது! (சட்ட விளக்கச் சண்டை);
பிரிவு:14: சட்டத்தின் முன் அனைவரும் சமம்!
பிரிவு:15: ஒருவரை மதம், ஜாதி, நிறம், பிறந்த இடம் இவற்றை வைத்து வித்தியாசப்படுத்தி பார்க்க கூடாது; (எல்லோரும் சமம்);
பிரிவு:16: அரசு உத்தியோகத்தில், ஒரே படிப்பு, தகுதிக்கு ஒரே மாதிரி வேலை உத்திரவாதம் உண்டு:
பிரிவு:17: தீண்டாமை ஒழிக்க வேண்டும்;
பிரிவு:18:  ஏற்கனவே கொடுத்திருந்த “கௌரவ பட்டங்கள்” ஒழிக்கப்பட வேண்டும்;
பிரிவு:19: பேச்சுரிமை உண்டு (ஆனாலும், இது நாட்டுக்கு குந்தகமாக இருக்க கூடாது);
பிரிவு:20: யாரையும் தண்டிக்க கூடாது (சட்டப்படி தவறு செய்திருந்தால் மட்டுமே தண்டிக்க வேண்டும்);
பிரிவு:21: அனைவரின் உயிருக்கும், பாதுகாப்புக்கும் உத்திரவாதம் வேண்டும்; (சட்டத்தின்படியே நடத்தவேண்டும்);
பிரிவு:21-ஏ: ஆறு வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டாயமாக கல்வி அறிவு கொடுக்க வேண்டும்; (இது 2002-ல் புதிதாக கொண்டு வரப்பட்டது);
பிரிவு:22: கைது செய்வதிலிருந்தும் சிறை வைப்பதிலிருந்தும் பாதுகாப்பு: (சட்டப்படி அல்லாமல், மற்ற வழிகளில் கைதோ செய்யவோ, சிறையில் அடைத்து வைக்கவோ கூடாது);
பிரிவு:23: அடிமைப்படுத்தி வேலை வாங்கவோ, பிச்சை எடுக்க வைக்கவோ கூடாது;
பிரிவு:24: 14 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை பேக்டரிகளில் வேலையில் அமர்த்தக் கூடாது;
பிரிவு:25: அவரவருக்கு விருப்பப்பட்ட தொழிலை, அவரவர் செய்து வர உரிமை உண்டு:
பிரிவு:26: அவரவருக்கு விருப்பப்பட்ட மதம் சார்ந்த செயல்களை செய்து வர உரிமை உண்டு (ஆனாலும், அது பொது அமைதிக்கு கேடு இல்லாமல் இருக்க வேண்டும்);
பிரிவு:27: மதம் சார்ந்த விஷயங்களுக்காக யார் மீதும் வரி விதிக்க கூடாது;
பிரிவு:28: அரசு உதவி பெற்ற நடத்தும் கல்வி நிறுவனங்களில், மதம் சார்ந்த படிப்புகள் சொல்லிக் கொடுக்க கூடாது;
பிரிவு:29: மைனாரிட்டி மக்கள் வசிக்கும் பகுதிகளில் அவர்களுக்கென்று தனி மொழி, கலாச்சாரத்தை வளர்த்துக் கொள்ள உரிமை உண்டு;
பிரிவு:30: மைனாரிட்டி மக்கள் தங்களுகென்று கல்வி நிறுவனங்களை உருவாக்கிக் கொள்ள உரிமை உண்டு;
பிரிவு:31: ஒருவர் சொத்து வைத்திருப்பதை அரசு பறித்துக் கொள்ள முடியாது; (இந்தப் பிரிவை 1979-ல் ரத்து செய்து விட்டனர்;)

**

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்-1

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்-1
(The Constitution of India, 1950)
ஒவ்வொரு நாட்டுக்கும், அந்தந்த நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம்தான் பைபிள் ஆகும்; அரசியல் அமைப்புச் சட்டம் இல்லாத நாடுகளே இல்லை எனலாம்; ஆனாலும் ஆச்சரியப்படும்படி, இங்கிலாந்து நாட்டுக்கு எழுதப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டம் இல்லையாம்! இதுவரை நடந்து வந்துள்ள முறைகளைக் கொண்டே நடந்து கொள்வார்களாம்! ஜென்டில்மென்!
இந்த அரசியல் அமைப்புச் சட்டங்களில், மிகப் பெரியது இந்திய அரசியல் சட்டமாகவே இருக்கும் என நினைக்கிறேன்! மொத்தம் 395 ஆர்ட்டிகிள்கள்; அதாவது 395 பிரிவுகளைக் கொண்டது:  இந்த 395 பிரிவுகளும், 22 அத்தியாயங்களில் அடக்கப்பட்டுள்ளது;
ஆனால் அமெரிக்க அரசியல் சாசனம், கிட்டத்தட்ட 250 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்டது; மிகப் பழமையான சட்டம் இதுவாகத்தான இருக்கும்! உலகத்திலேயே இதுவே மிகச் சிறிய அரசியல் அமைப்புச் சட்டமாக இருக்கும் என நினைக்கிறேன்! மொத்தமே ஏழு ஆர்ட்டிகிள்கள்தான்! (இந்தியாவின் 395 பிரிவுகள் எங்கே! அமெரிக்காவின் ஏழு பிரிவுகள் எங்கே!)
இந்திய அரசியல் சாசனத்தில் சில விஷயங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை! அவை;-
1)       இந்தியக் குடிமகன் என்பவர் யார் யார்?
2)       அவனின் அடிப்படை உரிமைகள் என்ன என்ன? (இதுதான் இப்போது முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது! இதில் பல வழக்குகள் மாநில ஐகோர்ட்டிலும், இந்திய சுப்ரீம் கோர்ட்டிலும் நடந்துள்ளன! இதை விளக்குவதற்காக சுப்ரீம் கோர்ட் பல தெளிவான, முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளையும் கொடுத்துள்ளது)
3)       ஜனாதிபதி, பார்லிமெண்ட், சுப்ரீம்கோர்ட், இந்திய ஆடிட்டர் ஜெனரல், மாநில கவர்னர்கள், மாநில சட்டசபைகள், மாநில ஐகோர்ட்டுகள், யூனியன் டெரிட்டரி, பஞ்சாயத்துக்கள், முனிசிபாலிட்டிகள், கோ-ஆப்ரேடிவ் சொசைட்டிகள், பழங்குடிகள் வசிக்கும் பகுதிகள், தேர்தல்கள், எமர்ஜென்சி கால நடைமுறைகள், என்று பல விஷயங்களை இதில் குறிப்பிட்டுள்ளார்கள்;
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் சில புதிய பிரிவுகளை திருத்தல் சட்டம் மூலம் கொண்டு வந்துள்ளனர்; இதுவரை (2015 வரை) 100 முறை இந்த அரசியல் சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது;
பார்லிமெண்ட் விரும்பினால் எந்த புதிய சட்டத்தையும் கொண்டு வரலாம்! அதுபோல, பார்லிமெண்ட் விரும்பினால், இந்த அரசியல் சாசன சட்டத்தைக் கூட திருத்திக் கொள்ளலாம் என்று இந்த சட்டத்தின் பிரிவு 368 சொல்கிறது! இந்த பிரிவில்தான், இதுவரை ஆண்ட அரசுகளுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் பிரச்சனையும் ஏற்பட்டிருக்கிறது;
சுப்ரீம்கோர்ட் தீர்ப்புப்படி, “ஒரு சட்டம் என்று இருந்தால், தேவைப்படும்போது அதை திருத்திக் கொள்ள பார்லிமெண்டுக்கு உரிமை உண்டுதான்! இதே அரசியல் சாசன சட்டத்தில் பிரிவு 368லிலும் பார்லிமெண்டுக்கு அந்த உரிமை கொடுக்கப்பட்டுள்ளது என்பது உண்மைதான்! அதற்காக, மொத்த அரசியல் சாச சட்டத்தையுமே பார்லிமெண்ட் திருத்தம் செய்து கொள்ளலாம் என்று கூறிவிட முடியாது; ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை உரிமைகள் சில உண்டு; அதில் எந்த பார்லிமெண்டும் கை வைக்க முடியாது! அதுதான் அரசியல் சாசன சட்டத்தின் சிறப்பு என்று கூடச் சொல்லிக் கொள்ளலாம்” என பல வழக்குகளில் கூறி உள்ளது;
**