Tuesday, January 5, 2021

ஜமீன் சொத்து

 சிவகிரி எஸ்டேட் ஜமின்தாராக செந்தட்டிக்கலை பாண்டியன் சின்னத்தம்பியார் இருந்தார். இவர் 1934-ல் இறந்து விட்டார். இவருக்கு ஏழு மகன்கள். மேலும் ஒரு வைப்பாட்டி மூலம் ஒரு மகன். எஸ்டேட் ஒழிப்புச் சட்டம் 1948 வந்தபோது, பணத்தை பெறுவதில் வழக்கு. வைப்பாட்டி மகனுக்கும் ஜீவனாம்ச உரிமை உள்ளதா என்று வழக்கு. 

பொதுவாக குடும்பச் சொத்ததுக்களை பாகம் பிரித்துக் கொள்ளலாம். ஆனால், பழைய பிரிட்டீஸ் அரசு சாசனம் மூலம் கொடுத்த ஜமின் சொத்துக்களை பாகம் பிரித்துக் கொள்ள முடியாது. மூத்த மகன் பதவிக்கு வருவான். இப்படிப்பட்ட ஜமின் சொத்துக்களை Impartitble Estate என்று சட்டம் சொல்கிறது.

இந்து கூட்டுக் குடும்பச் சொத்துக்களில் பாகம் கேட்கும் உரிமை உண்டு. ஜீவனாம்சம் கேட்கும் உரிமை உண்டு. ஆண்கள் பிறப்பால் பங்கு பெறுவர். ஆனால் ஜமின் சொத்துக்களில் இவ்வாறு சொத்தை பாகம் பிரிக்க முடியாது என்பது ஒரு வழக்கமாக இருந்து வந்துள்ளது. பாகம் பிரியாத ஜமின் சொத்துக்களுக்காகவே ஒரு சட்டம் இருந்தது. The Madras Impartible Estate Act II of 1904. இதன்படி, மூத்தவர் தவிர மற்றவர்களுக்கு ஜமின் சொத்தில் உரிமை கோர முடியாது. ஜீவனாம்ச உரிமையும் கோர முடியாது. வைப்பாட்டி மகன்கள் ஜீவனாம்சமோ, பங்கோ கேட்க முடியாது. எனவேதான் இத்தகைய தன்மை கொண்ட ஜமின் எஸ்டேட்டுகளை Impartible Estate பாகம் பிரிக்க முடியாத எஸ்டேட் என்று சட்டம் சொன்னது. ஆனாலும், இந்த 1904 சட்டப்படி மகன், பேரன், கொள்ளுப்பேரன், குழந்தை இல்லாத விதவை, திருமணம் ஆகாத மகள்கள் இவர்களுக்கு மட்டும் சலுகையாக ஜீவனாம்ச உரிமை கொடுக்கப் பட்டிருந்தது.

ஜஸ்டிஸ் பதந்சலி சாஸ்திரி அவர்கள் 1946ல் கொடுத்த தீர்ப்பின்படி, ஜமின்தார் சூத்திரராக இருந்தால், அவரின் வைப்பாட்டி மகன், ஜமின்தார் தனிச் சொத்தில் பங்கு பெறலாம் என்று தீர்ப்புக் கொடுத்திருந்தார். 

எட்டப்ப நாயக்கன் Vs. வெங்கடேஸ்வரா என்ற பழைய வழக்கில், ஜமின்தாரின் வைப்பாட்டி மகன் பங்கு கேட்கிறான். ஜமின்தார் Khatri காத்திரி என்று சமுகத்தைச் சேர்ந்தவர். அந்த வழக்கில், ஜமின்தாரின் வைப்பாட்டி மகன் ஜீவனாம்சம் கேட்கலாம். சொத்தில் பங்கு கேட்க முடியாது என்று தீர்ப்பு வந்தது. ஏனென்றால் ராஜா (ஜமீன்) சூத்திர சமூகத்தைச் சேர்ந்தவரில்லை. சூத்திர ராஜாவாக இருந்தால், வைப்பாட்டி மகன் சொத்தில் பங்கு வாங்கலாம்.


No comments:

Post a Comment