Monday, June 1, 2015

பாகப்பிரிவினை-5

பாகப்பிரிவினை-5
கூட்டு குடும்ப சொத்துக்களை தனி உரிமையாகப் பிரித்துக்கொள்ள விரும்பினால், பாகப் பிரிவினைப் பத்திரங்களை எழுதிப் பிரித்துக் கொள்ளலாம். பாகப் பத்திரங்களுக்கு முத்திரைத் தீர்வை என்னும் ஸ்டாம்ப் கட்டணமும் (ஸ்டாம்ப் பேப்பராக), அது இல்லாமல், பதிவுக் கட்டணமும் செலுத்த வேண்டும். அதில் தமிழ்நாடு அரசு சில சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி –
(1)   முதல்வகை பாகப் பிரிவினைப் பத்திரம்::-  பாகம் பிரித்துக் கொள்ளும் சொத்தானது பூர்வீகச் சொத்தாக இருந்தாலும், அல்லது நம் தகப்பனார், தாயார் போன்ற முன்னோர்கள் மூலம் கிடைக்கும் சொத்தாக இருந்தாலும், (அவர்கள் இறந்தபின், நமக்கு வாரிசு முறைப்படி கிடைக்கும் சொத்தாக இருந்தாலும்) அந்த பூர்வீகச் சொத்தைப் பிரித்துக் கொள்பவர்கள் அனைவரும் “ஒரே குடும்ப உறுப்பினர்களாக” இருக்க வேண்டும். அவ்வாறு ஒரே குடும்ப உறுப்பினர்களாக இருந்தால், அவரவர் பாகச் சொத்தின் மதிப்புக்கு 1% ஸ்டாம்ப் கட்டணமும், 1% பதிவுக் கட்டணமும் செலுத்த வேண்டும்; அதிலும் சலுகையாக, ஸ்டாம்ப் கட்டணம் மிக அதிகபட்சமாக ரூ.25,000/-ம் பதிவுக் கட்டணம் மிக அதிக பட்சமாக ரூ.4,000/- செலுத்தினால் போதும் என்று இந்திய முத்திரைச் சட்டத்தில் (தமிழ்நாடு திருத்தல் சட்டத்தில்) சொல்லப் பட்டுள்ளது. அதாவது சொத்தின் மதிப்பு ரூ.25 லட்சம் வரை 1% ஸ்டாம்பு கட்டணம் என்றும், சொத்தின் மதிப்பை அந்த ரூ.25 லட்சத்தை தாண்டிவிட்டால், அது எவ்வளவு அதிகமான மதிப்பாக இருந்தாலும், அதிக பட்ச ஸ்டாம்ப் கட்டணமாக ரூ.25,000/- செலுத்தினால் போதும். மேலும் இந்த கட்டணத்தை பிரித்துக் கொள்ளும் ஒவ்வொரு பங்கின் மதிப்புக்கும் செலுத்தி இருக்க வேண்டும். இவ்வாறான ஸ்டாம்ப் கட்டணம் அல்லாமல், பதிவுக் கட்டணமாக அதிக பட்சமாக ரூ.4,000/- ஒவ்வொரு பங்குக்கும் செலுத்த வேண்டும்.
“ஒரே குடும்ப உறுப்பினர்கள்” என்பது ‘தாத்தா, பாட்டி, (தந்தைவழி தாய்வழி, இரண்டும்தான்), தந்தை, தாய், மகன், வளர்ப்புமகன், மகள், வளர்ப்பு மகள், பேரன், பேத்தி, சகோதரன், சகோதரி” ஆகிய இந்த உறவுக்குள் மட்டுமே இருக்க வேண்டும். (இதைத் தாண்டி, பெரியப்பா, சித்தப்பா, அவர்களின் மகன், மகள், அண்ணி, மைத்துனன் போன்றவர்கள் இரத்த உறவாக இருந்தாலும், அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் என்ற இந்த விளக்கத்துக்குள் வரமாட்டார்கள். (சட்டத்தை அவ்வாறு வைத்துள்ளார்கள், என்ன செய்வது! உடன்பிறந்த சகோதரன், சகோதரியைக் கூட குடும்ப உறுப்பினர் இல்லை என்று வைத்திருந்து, வெகுகாலம் கழித்து, இப்போதுதான், சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான், அவர்களும் குடும்ப உறுப்பினர்கள்தான் என மத்திய அரசு முத்திரைச் சட்டத்தை திருத்தியுள்ளது).
(2)   இரண்டாம் வகை பாகப் பிரிவினையானது ‘குடும்ப உறுப்பினர் அல்லாதவர்களுக்குள் நடக்கும் பாகப் பிரிவினை. இதில், உறவே இல்லாத இரண்டு, நபர்கள் சொத்தை வாங்கி வைத்திருந்தால், அவர்கள் இந்த இரண்டாம் வகைப்படி பாகம் பிரித்துக் கொள்ளலாம். குடும்ப உறுப்பினர் அல்லாத வேறு உறவினர்கள் கூட்டாக ஒரு சொத்தை வாங்கி இருந்தாலும், அல்லது வாரிசு முறையில் அடைந்திருந்தாலும் அவர்களும் இதன்படி பாகம் பிரித்துக் கொள்ளலாம்.
இதில், சொத்தை இரண்டாகவோ, அல்லது பல பங்குகளாகவோ பிரித்துக் கொள்வர். இந்தமுறை பாகப்பிரிவினைப்படி, ஸ்டாம்ப் கட்டணம் சற்று வித்தியாசமாக இருக்கும். இதில் எது பெரிய பங்காக இருக்கிறதோ அதை விட்டுவிட்டு, மற்ற சிறிய பங்குகளின் மொத்த மதிப்பை கணக்கெடுத்து அந்த தொகைக்கு 4% வீதம் (அதாவது பிரிந்த பங்கு சொத்துக்களின் மதிப்பு ரூ. ஒரு லட்சமாக இருந்தால் ஸ்டாம்ப் கட்டணம் ரூ.4,000/- என்றும், மதிப்பு இரண்டு லட்சமாக இருந்தால் ஸ்டாம்ப் கட்டணம் ரூ.8,000/- என்றும் செலுத்த வேண்டும்.) பின்னர் பதிவுக் கட்டணமாக இதேபோல பிரிந்த பங்குகளின் (பெரிய பங்கு தவிர மற்ற பங்குகள் பிரிந்த பங்குகள் எனப்படும்) மதிப்புக்கு 1% வீதம் பதிவுக் கட்டணமும் செலுத்த வேண்டும்.
இந்த பாகப் பிரிவினைகளில், எல்லாப் பங்குகளும் சரிசமமாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஒருவருக்கு அதிகபங்கும் மற்றவருக்கு குறைந்த பங்கும் ஒதுக்கிக் கொள்ளலாம். அவரவர் விருப்பம்தான். அதற்கான காரணத்தை விளக்கிவிட்டால் பின்னாளில் பிரச்சனை இருக்காது.

சரிசமமாக பிரித்துக் கொள்கிறோம் என்று சொல்லி ஒரு சொத்தை பல பங்குகளாக பிரித்துக் கொண்டு, பின்னர் ஒருவருக்கு மதிப்பு குறைவான சொத்து கிடைத்திருந்தால் அவர் அந்த பாகப் பிரிவினையை எதிர்த்து கோர்ட்டுக்கு சென்று, அந்த பாகப் பிரிவினையே செல்லாது, சொத்தை நியாயமாகப் பிரிக்கவில்லை என்றும் கோர்ட் டிகிரி வாங்க முடியும். 

No comments:

Post a Comment