Saturday, October 8, 2016

பொது சிவில் சட்டத்தில் என்ன பிரச்சனை?—(1)

பொது சிவில் சட்டத்தில் என்ன பிரச்சனை?—(1) Common Civil Code
இந்தியாவில் உள்ள மக்களுக்கு பொதுவான சிவில் சட்டங்கள் வேண்டும் என்று இப்போது பேசப்பட்டு வருகிறது;
இந்திய அரசியல் சாசனச் சட்டம் 1950 (The Constitution of India, 1950) இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவான சட்டமே!
இந்திய சிவில் நடைமுறைச் சட்டம் 1905 (The Code of Civil Procedure, 1905) எல்லா இந்தியர்களுக்கும் பொதுவானதே!
இந்திய ஒப்பந்தச் சட்டம், 1872 (The Indian Contract Act, 1872) எல்லா இந்தியர்களுக்கும் பொதுவானதே!
சொத்துரிமை மாற்றுச் சட்டம் 1882 (The Transfer of Property Act 1882) எல்லா இந்தியர்களுக்கும் பொதுவானதே!
இந்திய பத்திரப் பதிவுச்சட்டம், 1908 (The (Indian) Registration Act, 1908) எல்லா இந்தியர்களுக்கும் பொதுவானதே!
இந்திய கிரிமினல் நடைமுறைச்சட்டம், 1861 (The Criminal Procedure Code, 1861) திருத்தச் சட்டம் 1973 எல்லா இந்தியர்களுக்கும் பொதுவானதே!
இந்திய தண்டனைச் சட்டம், 1860 (The Indian Penal Code, 1860) எல்லா இந்தியர்களுக்கும் பொதுவானதே!
இந்திய சாட்சியச் சட்டம், 1872 (The Indian Evidence Act, 1872) எல்லா இந்தியர்களுக்கும் பொதுவானதே!
இந்திய போலீஸ் சட்டம், 1861 (The Police Act, 1861) எல்லா இந்தியர்களுக்கும் பொதுவானதே!

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்; பெரும்பாலான சட்டங்கள் இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவான சட்டமே! இதில் மதங்களை வைத்து, இனங்களை வைத்து, மொழிகளை வைத்து, ஜாதிகளை வைத்து வேறுபாடு ஏதும் காட்டப்படவில்லை!

இந்தச் சட்டங்கள் எல்லாம், நம்மை ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் கொண்டு வரப்பட்டவை! அதையே நாமும் ஏற்றுக் கொண்டு இன்றுவரை சட்டமாக பின்பற்றி வருகிறோம்! ஏனென்றால், அந்தச் சட்டங்கள் பொதுவான சட்டங்கள் என்பதால் ஏற்றுக் கொண்டு விட்டோம்! உலக நாடுகளில், காமென்வெல்த் நாடுகள் எல்லாம் இந்த பிரிட்டீஸ் நடைமுறைச் சட்டங்களையே பின்பற்றுகின்றன என்பதால், நாமும் அவ்வாறே பின்பற்றி வருகிறோம்! இந்தச் சட்டங்கள் எல்லாம் இயற்கை நியதி என்ற தத்துவத்துடன் ஒத்துப்போவதால், அவைகள் இன்றுவரை சட்டமாக இருந்து வருகின்றன!
அப்படியென்றால், வேறு என்ன சிக்கல் உள்ளது?

பொதுவான விஷயங்களுக்குப் பொதுச் சட்டமும், மதம் சார்ந்த விஷயங்களுக்கு அந்தந்த மதம் சார்ந்த சட்டமும் உள்ளன! உதாரணமாக மதம் சார்ந்த தனிச் சட்டங்கள் கீழ்கண்ட விஷயங்களில் தன் அதிகாரத்தைச் செலுத்துகின்றன; அவை:-
திருமணம், அடாப்ஷன் என்னும் தத்துக் குழந்தை எடுக்கும் முறை, டைவோர்ஸ் என்னும் மணமுறிவு, இறந்தவரின் சொத்துக்களில் வாரிசு உரிமை, இப்படிச் சில குறிப்பிட்ட விஷயங்களில் மட்டும் அந்தந்த மதம் தன் மூக்கை நுழைத்து உள்ளது!

பிரிட்டீசார் நம்மை ஆள்வதற்கு முன்னர், நாடு கடந்து வியாபாரம் நடந்து கொண்டிருந்தது; இப்போது, வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலும் நடந்து வந்தது; இதில் பிரச்சனை ஏற்பட்டால், எப்படி தீர்ப்பது என்பது தொன்று தொட்ட வழக்கமாக ஒரு வழக்கம் இருந்து வந்திருக்கிறது: அதன்படி, கடன் கொடுத்தவர் இந்து மதத்தை சேர்ந்தவராக இருந்து, கடன் வாங்கியவர் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவராக இருந்தால், அவரிடம் பஞ்சாயத்துச் செய்யும் முறையானது, இந்து மத முறைப்படி இருக்க வேண்டுமாம்! அதாவது பாதிப்புக்கு உள்ளானர் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருக்கிறாரோ அந்த மத சாஸ்திரங்களின்படி அவரிடம் விசாரனையும், தீர்ப்பும், தண்டனையும், இருக்குமாம்! எளியவனுக்குச் சாதகமாக இருப்பது என்பது ஒருவகைத் தர்மமே!

இது பொதுவான வியாபார விஷயங்களில் இப்படி நடந்து வந்திருக்கிறது; அதைத்தான் பின்னர், பிரிட்டீஸார் மாற்றி அமைத்து, எல்லோருக்கும் ஒரே பொதுவான சட்டம் கொண்டு வந்தால் என்ன என்றும், அதை பிரிட்டீஸ் இந்தியா முழுமைக்கும் அமல் படுத்தினால் என்ன என்றும் தோன்ற, அதையே இங்கிலாந்து அரசு சட்டமாக்கி விட்டது! அவைகள்தான் மேலே சொல்லப்பட்ட பலதரப்பட்ட இந்திய சட்டங்கள்! அவைகள்தான் இன்றும் அமலில் இருக்கின்றன!

(தொடரும்)…

No comments:

Post a Comment