Saturday, October 8, 2016

பொது சிவில் சட்டத்தில் என்ன பிரச்சனை?--(2)

பொது சிவில் சட்டத்தில் என்ன பிரச்சனை?--(2) Common Civil Code

இருந்தபோதிலும், மதங்கள் சம்மந்தப்பட்ட விஷயங்களில் பிரிட்டீஸ் அரசு அவ்வளவாகத் தலையிடவில்லை என்றே கூறலாம்! அந்தந்த மதத்தைச் சார்ந்த பண்டிட்டுகள் பிரிட்டீஸ் அரசை குழப்பி விட்டனர்! என் கடவுள் இதைத்தான் ஆணித்தரமாகச் சொல்லி உள்ளான்! அதை நான் மீற முடியாது! அப்படி மீறுவதென்பது, என் கடவுளை மீறுவதாகும் என்று மிரட்டி விட்டான்! பிரிட்டீஸ் அரசும் ‘எப்படியாவது போய்த் தொலையட்டும்’ என்று விட்டுவிட்டான்! இந்தியன் ஜெயித்தாக நினைத்துக் கொண்டான்!

இது என் பொதுவான கருத்து: “மதங்கள் என்பதே, ஒரு பெரும் கூட்டத்துக்கான ஒரு நடைமுறை தர்ம, நியாய, சட்டங்கள் அடங்கிய ஒரு பொக்கிஷம்; அந்தந்த மதத்துக்கு அது ஒரு புனிதநூல்; இல்லையென்றால், மனிதன் மிருகமாகவே வாழ நேரிடும்; அவனை நெறிப்படுத்த மதங்கள் உருவாகின; அந்த அந்த பகுதிகளில் மக்கள் வாழ்க்கைக்கு ஏற்றவாறு மதங்கள் உருவாகின; அவைகளுக்கு வேறு வேறு பெயர்கள் உண்டு; எல்லா மதங்களின் தற்போதுள்ள அவரவர்களின் புனித நூல்களை படித்துப் பார்த்தால், எல்லாமே ஒரு தலைவனை அல்லது இறைவனை முன்நிறுத்துகின்றன; அவனால் முடியாதது எதுவும் இல்லை என்றும் சொல்கின்றன; அதை உறுதிப் படுத்தி, அந்த இறைவனின் அதி அற்புதமான செயல்களை கதைகளாகவும், வீரதீர சாகசங்களாகவும் சொல்லி வைத்துள்ளன; அவனை “முழுவதுமாக நம்பினால்” இந்த உலகிலும், இம்மை உலகிலும் உனக்குப் பயம் இல்லை, என்றும், அவனை எதிர்த்தால், உன் கதி அதோகதிதான் என்றும் மிரட்டி உள்ளன; மனிதனை மதங்கள் பெரும்பாலும் பயப்படுத்தியே வைத்திருக்கின்றன; இவை எல்லாவற்றையும் தாண்டி, ஒரு பெரிய நல்ல காரியத்தையும் எல்லா மதங்களுமே செய்திருக்கின்றன; அதுதான், “அன்பு”; எல்லா உயிர்களிடத்திலும் அன்பாய் இரு, என்றும், இரக்கம் கொண்டு உதவ வேண்டும் என்றும், உயிரினங்களுக்கும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்றும் தெள்ளத் தெளிவாக விளக்கியும் உள்ளன;”

ஆனால் நாம் அனைவரும், அவரவர் மதங்களின் “கதாநாயகனை” மட்டும் பிடித்துக் கொண்டு, வெறி கொள்ள வைத்து, மதங்களின் கொள்கைகளை சாக்கடையில் வீசி எறியும் வேலையை செய்து கொண்டிருக்கிறோம்! அது கிடக்கட்டும்!

பிரிட்டீஸ் அரசு, இந்தியாவில் மதங்கள் சம்மந்தப்பட்ட சட்டங்களில் அவ்வளவாக தலையிடவில்லை; அதனால் பிரச்சனை வரும் என்று நினைத்திருக்கலாம்! அந்த அந்த மதத்தின் திருமண நடைமுறைகள், திருமண முறிவு நடைமுறைகள், தத்து என்னும் சுவிகாரம் எடுக்கும் நடைமுறை, சொத்தில் வாரிசுகளுக்குப் பங்கு கொடுப்பது போன்ற சில விஷயங்கள் இன்றும் அந்த அந்த மதங்களின் நடைமுறையே சட்டமாகப் பின்பற்றப் பட்டு வருகிறது;

இந்தியன் மெஜாரிட்டி சட்டம், 1875 (The Indian Majority Act, 1875) இந்தச் சட்டமும் பிரிட்டீஸ் அரசு கொண்டு வந்த சட்டம்தான்; அப்போது இந்தியாவில் ஒவ்வொரு மதத்துக்கும், ஒருவரின் மேஜர் வயதைப் பொறுத்து ஒவ்வொரு விதமான கருத்து உண்டு; இந்து மதத்தில், ஒரு சிறுவன் இந்தியாவின் தென் பகுதியில் வசித்தால் அவன் தன் 15வது வயதில் மேஜர் வயதை அடைவான் என்றும், மற்ற பகுதியில் வசித்தால், அவனின் மேஜர் வயது 16 வயதுக்கு மேல் என்றும் கொள்கை உண்டு; இஸ்லாமிய மதத்தில் ஒரு சிறுவன் தன் 12 வயதில் மேஜர் வயதை அடைவான் என்றும், சிறுமியாக இருந்தால் அவள் “வயதுக்கு வந்தவுடன்” மேஜர் வயதை அடைவாள் என்றும் கொள்கை உண்டு; இப்படி ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு வகையான கொள்கை, அதுவே சட்டம்;

இப்படி குழப்பமாக இருந்தால், அவர்களுக்குள், மாற்று மதத்தினருக்குள் நடக்கும் ஒப்பந்தங்கள், கிரயங்கள், புரோ நோட்டுகள் என்ற பொதுவான விஷயங்களும் சேர்ந்து பாதிக்கப் படுகின்றன; எனவே பிரிட்டீஸ் அரசு, இந்த மேஜர் வயது விஷயத்தில் ஒரு பொதுவான சட்டம் தேவை எனக் கருதியது; அப்படிக் கொண்டு வரப்பட்ட சட்டமே மேலே சொன்ன இந்திய மேஜர் சட்டம 1875 (The Indian Majority Act, 1875); அதன்படி பொதுவான இந்தச் சட்டத்தை ஏற்படுத்தி, அதன்படி, இந்தியாவில் இருக்கும் எவரும், அவர் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், அவர் தன் 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் மேஜர் வயதை அடைவார் என்றும், அதன்பின்னர் அவர் எல்லா விதமான சட்ட பத்திரங்களிலும் கையெழுத்துச் செய்ய முடியும் என்றும் சொல்லி விட்டது; ஆனாலும், இந்த சட்டம், இந்து, முஸ்லீம் போன்ற மற்ற மதங்களில் நடக்கும் திருமணம், டைவோர்ஸ், தத்து, சொத்துரிமை போன்றவற்றில் தலையிடாது என்ற சொல்லி விட்டது; அதனால்தான், அந்தக் காலத்தில், சிறுவயதுப் பெண்ணை திருமணம் செய்து கொள்வது போன்றவை நடைமுறையில் இருந்து வந்தன; முஸ்லீம் மதப்படி அங்கு திருமணம் செய்து கொள்ளலாம்; தலக் என்னும் டைவோர்ஸ் முறையும் அங்கீகரிகப் பட்டது; அதற்கு வயது வித்தியாசம் தேவையில்லை; அந்தந்த மதங்கள் என்ன சொல்கின்றனவோ, அதையே நடைமுறைப் படுத்திக் கொள்ளும்படி பிரிட்டீஸ் அரசு சொல்லிவிட்டது;

(தொடரும்)…

No comments:

Post a Comment