Tuesday, October 18, 2016

Lis Pendense ( லிஸ் பென்டன்ஸ்):

Lis Pendense ( லிஸ் பென்டன்ஸ்):
லிஸ் என்றால் லிட்டிகேஷன்; (Lis = Litigation);
பென்டன்ஸ் என்றால் பென்டிங்; (Pendense = Pending):
லிட்டிகேஷன் பென்டிங் என்றால் “வழக்கு, கோர்ட்டில் நிலுவையில் உள்ளது” என்று பொருள் கொள்ளலாம்;
இதைப்பற்றி “சொத்துரிமை மாற்றுச் சட்டம் 1882-ல் (The Transfer of Property Act, 1882) அதன் பிரிவு 52ல் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது;
**
Sec.52:  ஒரு அசையாச் சொத்தின் உரிமையைப் பற்றி ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு, அந்தப் பிரச்சனையை வழக்காக ஒரு கோர்ட்டில் தாக்கல் செய்திருந்து, அது அந்த கோர்ட்டில் நிலுவையில் இருந்தால், -- அந்த அசையாச் சொத்தை (அந்த வழக்கில் சம்மந்தப்பட்ட பார்ட்டிகள்) விற்பனை முதலிய எந்த சொத்து மாற்றத்துக்கும் உட்படுத்தக் கூடாது; (அதனால் எதிர்பார்ட்டிக்கு பாதிக்கும் வகையில் அந்த சொத்து மாற்றம் இருக்கும் என்பதால் இந்த தடை ஏற்படுத்தப்படுகிறது;)
ஆனால் – அதே கோர்ட்டின் அனுமதி பெற்று சொத்து மாற்றம் செய்து கொள்ளலாம்; கோர்ட்டும், ஏதாவது நிபந்தனையுடன் அதை அனுமதிக்கலாம்;
விளக்கம்: வழக்கு நிலுவையில் உள்ளது என்பது, வழக்கு தாக்கல் செய்த நாளில் இருந்து, வழக்கில் தீர்ப்பு நாள் வரை, கணக்கில் கொள்ள வேண்டும்; தீர்ப்பு வந்தபின்னரும் அது தொடரும், அந்த தீர்ப்பை நிறைவேற்றும் நாள் முடியும் வரை அது தொடரும்;
**
இந்தியாவில், இப்படிப்பட்ட சட்டப்பிரிவு இருந்தாலும், வழக்குப் போட்டவர்கள் சொன்னால் ஒழிய, மற்றவர்களுக்கு “இந்த சொத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது” என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பே இல்லை;

ஆனால் – அமெரிக்க நாட்டில், இதே சட்டப்பிரிவு உள்ளது; அதில், அவ்வாறு வழக்கு நிலுவையில் இருந்தால், அதை பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு தெரிவித்துவிடுவர்; எனவே வெளி நபர்கள் வெகு எளிதாக அதை அறிந்து கொள்ள முடியும்;

இந்தியாவில் இன்னும் அந்த நிலை வரவில்லை; யாரும் முயற்சிக்கவும் இல்லை; வழக்குப் போட்டவுடனேயே, அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் வில்லங்கத்தில் பதிவு செய்தால், பல பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்பட்டுவிடும்;

இந்தச் சட்டப்பிரிவின்படி, பொதுவாக, ஒரு சொத்தைப் பொறுத்து வழக்கு நிலுவையில் இருந்தால், அந்த சொத்தை, அந்த வழக்கில் சம்மந்தப்பட்ட பார்ட்டிகள் விற்பனை போன்ற பத்திரங்கள் மூலம் சொத்து மாற்றம் செய்யக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது; அப்படி இருந்தபோதிலும், பார்ட்டிகள் விரும்பினால், அதே கோர்ட்டின் அனுமதியுடன் சொத்து மாற்றம் செய்யலாம் என்றும் சொல்லப் பட்டுள்ளது; அப்படி, கோர்ட் அனுமதி கொடுத்தால், ஏதாவது அதற்குறிய நிபந்தனைகளையும் விதிக்கலாம் என்றும் சொல்லப் பட்டுள்ளது;

இதில் இரண்டு சந்தேகங்கள் எழும்:
1). இந்த சட்டப்பிரிவை மீறி, “வழக்கில் பார்ட்டிகளாக உள்ளவர்கள்” விற்பனை செய்து விட்டால், அந்த கிரயத்தின் நிலை என்ன? அப்படியும் மீறி விற்பனை செய்திருந்தால், அந்தப் பத்திரம் சட்டப்படி செல்லாது என்றாலும், அந்த வழக்கில் தீர்ப்புக்கு அந்தப் பத்திரம் உட்பட வேண்டும் என்பதே அதன் மறைமுக அர்த்தம்; அதாவது, தீர்ப்பு சாதகமாக இருந்தால், அந்த பத்திரம் செல்லும்; தீர்ப்பு பாதகமாக இருந்தால், அந்தப் பத்திரம் செல்லாது; அவ்வளவே!

2). இந்த சட்டப்பிரிவை மீறி, “வழக்கில் பார்ட்டிகளாக இல்லாதவர்கள்” விற்பனை செய்திருந்தால் – அவர்களும் அந்த வழக்கின் தீர்ப்புக்கு கட்டப்பட்டவர்கள்தான்; ஏனென்றால், வழக்கு நிலுவையில் இருப்பது எனக்குத் தெரியாது; அதில் நான் பார்ட்டியாக இல்லை; எனவே அந்தத் தீர்ப்பை என்னைக் கட்டுப்படுத்தாது என்ற சட்ட வாதம் ஏற்றுக் கொள்ளப்படாது; ஏனென்றால், வழக்கு நிலுவையில் இருந்தாலே, அது பொதுவான அறிவிப்பு என்றே சட்டம் கருதுகிறது; அதாவது வழக்கு நிலுவையில் இருப்பது எல்லா மக்களுக்கும் தெரியும் என்றே சட்டம் கருதுகிறது; (அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் தகவலாகப் பதிவும் செய்து விட்டால், பொதுமக்களுக்கு பிரச்சனை இருக்காது: இந்திய அரசு அப்படி ஒரு சட்டப்பிரிவையும் கொண்டு வந்தால், நல்லது, எதிர்பார்ப்போம்!);
**

No comments:

Post a Comment