Friday, October 28, 2016

புதிய பினாமிச் சட்டம் 2016

புதிய பினாமிச் சட்டம் 2016

Benami Transaction Prohibition Amendment Act 2016
இந்த புதிய பினாமி தடுப்புச் சட்டம் 2016 நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறதாம்!

ஏற்கனவே 1988ல் இருந்து நடைமுறையில் உள்ள பழைய சட்டமான பினாமி தடுப்புச் சட்டம் 1988-ஐ மாற்றி, அதற்கு இன்னும் வலு கொடுப்பதற்காக இந்த புதிய சட்டமான பினாமி தடுப்பு திருத்தல் சட்டம் 2016 வந்துள்ளது;

பழைய 1988 சட்டத்தில், யாரும் பினாமியாக சொத்து, வேறு ஒருவர் பெயரில் சொத்து வாங்கி வைத்துக் கொள்ள முடியாது; 1988 சட்டம் வருவதற்கு முன்னர் அப்படி பினாமியாக வேறு ஒருவர் பெயரில் சொத்தை வாங்கி வைத்துக் கொள்ள முடியும்; பின்னர் அந்தச் சொத்து தனக்குத்தான் சொந்தம் என்று திரும்ப பெற முடியும்; பினாமி பெயரில் இருந்தவர் என் சொத்து என்று கேட்க முடியாது; இதனால், மிக அதிகமானவர்கள், சொத்துக்களை தங்கள் பெயரில் வாங்காமல், பினாமி பெயரில் வாங்கி வைத்துக் கொள்வார்கள்; 

இதைத் தடுப்பதற்காக, திரு. ராஜிவ்காந்தி பிரதம மந்திரியாக இருந்த காலத்தில், 1988ல் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது; அந்த 1988 பினாமி தடுப்புச் சட்டத்தில் மொத்தமே 9 பிரிவுகள் தான் இருக்கிறது; அந்த 1988 சட்டப்படி, யாரும் பினாமி பெயரில் சொத்து வாங்க கூடாது என்றும், அவ்வாறு வாங்கினால், அதை அரசு எடுத்துக் கொள்ளும் என்றும், நான் பினாமியாக வாங்கிய சொத்து, அந்த சொத்து எனக்குத் தான் சொந்தம் என்று எந்தக் கோர்ட்டிலும் வழக்குப் போட முடியாது என்றும், கூறப்பட்டுள்ளது; ஆனாலும், ஒருவர், தன் மனைவி, மைனர் மகன், திருமணமாகாத மகள் இவர்கள் பெயரில், அவர்களின் வருங்கால நன்மைக்காக, இவரின் பணத்தைக் கொண்டு, அவர்கள் பெயரில் சொத்தை பினாமியாக வாங்கி வைக்கலாம்; அப்படி வாங்கி வைப்பது சட்டப்படி தவறு ஆகாது; ஆனாலும், அந்தச் சொத்தை வாங்கியவர், எனக்குத்தான் சொந்தம் என்றும், நான்தான் பினாமியாக என் மனைவி பெயரில் வாங்கினேன் என்று திரும்ப அந்தச் சொத்தை வாங்க முடியாது;

பழைய 1988 சட்டத்தில், பினாமி சொத்துக்களை அரசு எடுத்துக் கொள்வதில் சரியான வரைமுறை  அந்த சட்டத்தில் செய்யப் படவில்லை; எனவே சொத்தை அரசு பறிமுதல் செய்வதில் குளறுபடி இருந்தது; பினாமியாக சொத்து வைத்திருந்தால் 3 ஆண்டு சிறை என்றும் இருந்தது;

இருந்தும், 1988ன்படி கருப்புப் பணத்தை கட்டுப்படுத்த முடியவில்லையாம்! அதனால் அந்தப் பழைய 1988 சட்டத்துக்கு புத்துயிர் கொடுத்து இந்த 2016 புதிய திருத்தல் சட்டம் நடைமுறைக்கு நவ-1 முதல் வருகிறது; இதன்படி, பினாமி சொத்துக்களை விசாரனை செய்யும் கோர்ட்டுகளையும், அதிகாரிகளையும் விவரித்துள்ளனர்; பினாமியில் சொத்து வாங்கினால் 7 ஆண்டுகளுக்கு சிறை என்று சட்டம் திருத்தப் பட்டுள்ளது;   இந்த புதிய திருத்த சட்டத்தில் மொத்தம் 71 பிரிவுகள் உள்ளன; அதிகமாக கிடுக்கிப் பிடி போடப் பட்டுள்ளது;
**


No comments:

Post a Comment