Friday, October 21, 2016

சொத்துரிமை-9

சொத்துரிமை-9
பிரிவு-28 என்பது உடல் குறை உள்ளவர்கள், வாரிசுகளாக இருந்தால் அவர்களும் சொத்தை வாரிசு முறைப்படி அடையலாம் என்று சொல்கிறது;
ஆனால், இதற்கு முன் இருந்த பழைய இந்து சட்டப்படி, ஊமை, கண் தெரியாதவர், பைத்தியம், லெப்ரசி என்னும் குஷ்டரோக நோய் இருப்பவர்கள் சொத்தில் வாரிசு உரிமை கோர முடியாது என்று இருந்தது; அதை முழுவதுமாக மாற்றி, உடல் குறை ஒரு குறையே அல்ல என்றும், அவர்களும் வாரிசு முறைப்படி வாரிசாக சொத்தை அடைவார்கள் என்று சொல்லி உள்ளது, அந்த 1956 வாரிசுரிமை சட்டத்தின் சிறப்பு ஆகும்;

பிரிவு-29ன்படி ஒரு வாரிசு சொத்தை அடைய முடியாத நிலை சட்டத்தில் இருந்தால், அவர் இறந்து விட்டதாகவே கருதிக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது; அதாவது, தகப்பனை கொலை செய்த மகன், அந்த தகப்பனின் சொத்தில் உரிமை கேட்க முடியாது; இவர் சட்டப்படி சொத்தை அடைய முடியாத நிலையில் இருக்கிறார்; எனவே இவர் இறந்ததாகவே சட்டம் கருதுகிறது; அதாவது அவர் இறந்துவிட்டார் என நினைத்துக் கொண்டு, மற்ற வாரிசுகள் சொத்தை அடையலாம்;

பிரிவு-30 இறந்தவரின் வாரிசுகளைப் பற்றி பேசவில்லை; மாறாக, சொத்தை வைத்திருப்பவர் அவர் உயிருடன் இருக்கும்போதே, உயில், செட்டில்மெண்ட் எழுதி வைத்திருப்பார்; அப்படிப்பட்ட சொத்துக்கள் அந்த உயில்படியே போய்ச் சேரும் என்று சொல்லி உள்ளது; அதில் வாரிசுகளுக்கு எந்த வேலையும் இல்லை;

மேலும், ஒருவரின் தனிச் சொத்துக்களுக்கு அதாவது சுய சம்பாத்திய சொத்துகளுக்கு உயில் எழுதலாம்; ஆனால் பூர்வீகச் சொத்துக்களுக்கு உயில் எழுத முடியுமா என்ற கேள்வி எழும்; அதற்கும் இங்கு பதில் கொடுக்கப்பட்டுள்ளது; பழைய இந்து சட்டப்படி, பூர்வீக சொத்துக்கள் எனப்படும் கோபார்சனரி சொத்துக்களில் யாருக்கு எவ்வளவு பங்கு என்று தெரியாது, எனவே அவரின் பங்கைப் பொறுத்து உயில் எழுதி வைக்க முடியாது; பாகம் பிரித்துக் கொண்டால்தான் தனிப் பங்கு கிடைக்கும் நிலை இருந்தது; ஆனால், 1956 சொத்துரிமைச் சட்டப்படி பூர்வீகச் சொத்துக்களில் தன் பங்கு சொத்தைப் பொறுத்து உயில் எழுதி வைக்கலாம் என்ற சலுகை கிடைத்துள்ளது என்றே கருத வேண்டும்;
**



No comments:

Post a Comment