Friday, October 21, 2016

சொத்துரிமை-8

சொத்துரிமை-8

மேலும், பிரிவு-26ல் மதம் மாறியவர் யார் யார் சொத்தில் பங்கு கேட்க முடியும் அல்லது முடியாது என்பதைப்பற்றி விளக்குகிறது; அதாவது தகப்பன் சொத்தை விட்டுவிட்டு இறந்து விடுகிறார்; பொதுவாக மகனுக்கு அதில் பங்கு கிடைக்கும்; அந்த மகன் இந்துவாக இருந்தால் பங்கு கிடைக்கும்: அந்த மகன் வேறு மதத்துக்கு மதம் மாறி விட்டிருந்தாலும் தகப்பன் சொத்தில் மதம் மாறிய மகனுக்கு பங்கு கிடைக்கும்: ஏனென்றால், இங்கு இறந்த தகப்பன் இந்து; எனவே இந்துவின் சொத்து  அந்த இந்துவின் வாரிசுகளுக்குப் போய் சேரும்;

ஆனால், அந்த மதம் மாறிய இந்து மகனுக்கு ஒரு மகன் பிறக்கிறான் என நினைத்துக் கொள்வோம்; அதாவது இறந்தவருக்குப் பேரன்; அந்த பேரன் ஒரு இந்துவின் மகன் அல்ல, மாறாக, மதம் மாறியவரின் மகன் ஆவார்; அதாவது இறந்தவரின் மகன் கிறிஸ்தவராக மாறி இருந்தார் என நினைத்துக் கொள்வோம்; எனவே அந்த கிறிஸ்தவரின் மகனுக்கு, தன் தாத்தா சொத்தில் உரிமைஇல்லை;

இதை இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், சொத்தை விட்டுவிட்டு இறந்த மகனோ, மகளோ எந்த மதத்துக்கு மாறி விட்டாலும் பிரச்சனை இல்லை; அவர்களுக்கு அவர்களின் தகப்பன் சொத்தில் பங்கு கிடைக்கும்;

ஆனால், சொத்தை விட்டுவிட்டு இறந்தவரின் மகன் மதம் மாறிவிட்டு, அவரின் தகப்பனார் இறப்பதற்கு முன்னரே இறந்து விட்டிருந்தால், தாத்தா இறக்கும்போது, பேரன் இருப்பான்; அவனுக்குச் சொத்து போக வேண்டும்; ஆனால் இங்கு, தாத்தா இறந்தபின்னர், அவரின் இறந்த மகன் மதம் மாறி இருப்பதால், அந்த மதம் மாறியவரின் மகனுக்கு அல்லது மகளுக்கு பங்கு கிடைக்காது; அதுதான் இந்த பிரிவு சட்டத்தின் சிறப்பு;

இதை இன்னும் விளக்கமாகச் சொன்னால், இறந்த இந்துவின் சொத்தை அவரின் வாரிசுகள் யார் வேண்டுமானாலும் அடைந்து கொள்ளலாம்; அவர்கள் மதம் மாறி இருந்தாலும் கவலையில்லை; ஆனால், இறந்த இந்துவின் சொத்தை, அவரின் வாரிசுகளில் யாராவது மதம் மாறி இருந்தால், அவர்கள் மூலம் அவர்களின் வாரிசுகள் அடைய முடியாது என்று விளங்கிக் கொள்ள வேண்டும்;



No comments:

Post a Comment