Friday, October 21, 2016

சொத்துரிமை-7

சொத்துரிமை-7

மேலும் பிரிவு-23ம் அதேபோல, குடும்ப சொத்தான குடியிருக்கும் வீட்டை, உடனடியாக பங்கு பிரித்துக் கொள்ள முடியாது: அங்கு ஒரு ஆண் (சகோதரன்) குடியிருந்தால், அவனின் சகோதரி, அந்த குடியிருக்கும் வீட்டை பிரித்துக் கொடுக்கும்படி கேட்க முடியாது; ஏனென்றால், பெண் அவளின் கணவர் வீட்டில் குடியிருப்பாள்; அவள், பிறந்த வீட்டின் வீட்டை பங்கு பிரிக்க முதலில் கேட்க முடியாது; ஆனாலும் மற்ற சகோதரர்கள் அதை பங்கு பிரித்துக் கொண்டால், இவளுக்குறிய பங்கு இவளுக்கு கிடைக்கும்; இந்த சட்டத்தில் இப்போது திருத்தம் செய்து விட்டார்கள்; இப்போது அந்த பெண்ணும் பங்கு கேட்டு வழக்கு போட முடியும் என்று மாற்றப்பட்டுள்ளது;

மேலும் பிரிவு-24 சற்று வித்தியாசமான சட்டம்; கணவர் இறந்து விட்டால், அவனின் மனைவி விதவை என்று சட்டம் கருதுகிறது; அவள் விதவையாக இருக்கும்வரை அவள் கணவர் சார்ந்த சொத்துக்களில் பங்கு கேட்க முடியும்; ஆனால், அவள் வேறு யாரையாவது மறுமணம் செய்து கொண்டால் அவ்வாறு இறந்த கணவரின் சொத்துக்களில் பங்கு கேட்க முடியாது; (இறந்த கணவரின் சொத்தில் பங்கை வாங்கிக் கொண்டு மறுமணம் செய்திருந்தால் அது சட்டப்படி செல்லும்) அதுவல்ல இங்கு பிரச்சனை! கணவர் இறந்து விடுகிறார்; அவனுக்கு தனிச் சொத்து ஏதும் இல்லை; அந்த விதவை மனைவி வேறு ஒருவரை மறுமணம் செய்து கொள்கிறார்; அதற்குப்பின்னர், இறந்த கணவரின் தகப்பனார் இறக்கிறார்; அவருக்கு சொத்து இருக்கிறது; அந்தப் பங்கு அவரின் மகனுக்கு வரும்; அந்த மகன் ஏற்கனவே இறந்தவிட்டதால், அவனின் விதவை மனைவிக்கு வரும்; அப்போது அந்த மனைவி விதவையாகவே இருந்தால், (அதாவது மறுமணம் செய்யாமல் இருந்தால்) மாமனார் சொத்தில் பங்கை அடைவார்; மாறாக, மாமனார் இறந்த நாளில் அவள் மறுமணம் செய்திருந்தால், அந்த சொத்தில் பங்கு கிடைக்காது என்ற நிலையை விளக்குவதற்காக இந்தப் பிரிவு-24 கொண்டுவரப்பட்டது;

மேலும், பிரிவு-25 கொலைசெய்தவன், கொலை செய்யப்பட்டவனின் சொத்தில் பங்கு பெற முடியுமா என்றால் முடியாது என்று சொல்கிறது; அதாவது தகப்பனை கொன்ற மகன், அந்த தகப்பனின் சொத்தில் பங்கு கேட்கும் உரிமை இல்லை என்று விளக்குகிறது;



No comments:

Post a Comment