Thursday, December 29, 2016

தேசிய கீதமும் அதன் அவமதிப்பும்

தேசிய கீதமும் அதன் அவமதிப்பும்

2016 நவ 30 அன்று இந்திய சுப்ரீம் கோர்ட் ஒரு உத்தரவை பிறப்பித்தது; அதன்படி, தேசிய கீதத்தை எல்லாத் திரை அரங்குகளிலும், சினிமா படத்தை காட்டுவதற்கு முன்னரே இசைக்க வேண்டும் என்றும், அப்போது எல்லோரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவை பிறப்பித்தது; சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளான ஜஸ்டிஸ் தீபக் மிஸ்ரா மற்றும் ஜஸ்டிஸ் அமித்வாராய் பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது;

பின்னர், கேளராவில் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் என்னும் (IFFK) அமைப்பு பலநாட்டு திரைபடங்களை காண்பித்தது; அதில் எகிப்து நாட்டின் திரைப்படமான கிலாஷ் (Clash) என்ற படம் ஒளிபரப்பானது; அப்போது, இந்தியாவின் தேசியகீதம் ஒலிக்கபட்டது: அதில் கலந்து கொண்டவர்களில் ஆறு பேர் மட்டும் எழுந்து நின்று வணக்கம் தெரிவிக்கவில்லையாம்; அவர்களை கைது செய்துள்ளனர்;

பாரதிய ஜனதா பார்ட்டியின் இளைஞர் அணியான பாரதிய யுவ மோர்ச்சா என்ற அமைப்பில் உள்ள இளைஞர்கள் இந்தப் புகாரை டிஜிபி-யிடம் அளித்துள்ளனர்; அவர் உதவி கமிஷனரை நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்; இந்த ஆறுபேரில் போலீஸ் அதிகாரிகளும் அடங்குவர் என்றும் சொல்லப்படுகிறது;

இந்த திரைப்பட விழாவை நடத்தும் குழுவினர், இந்த நிகழ்வுக்கு முன்னரே, சுப்ரீம் கோர்ட்டை அணுகி, வெளிநாட்டு திரைபடங்கள் வெளியிடும் விழாவுக்கு இந்திய தேசியகீதம் இசைப்பதில் இருந்து விதிவிலக்கு வேண்டும் என கேட்டுள்ளனர்; தினம் தினம் மிக அதிகமாக திரைப்படங்கள் வெளியிட வேண்டி உள்ளதால், ஒவ்வொரு முறையும் தேசியகீதம் இசைக்கும்போது, எழுந்து நிற்பது சிரமமானது என வேண்டுகோள் விடுத்தது; ஆனாலும், சுப்ரீம் கோர்ட் அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது; 40 திரைபடங்கள் வெளியிட்டாலும், 40 முறை எழுந்துதான் நிற்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறிவிட்டது;

இந்திய அரசியல் சாசனச் சட்டம் பிரிவு 51ஏ-ன் படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அரசியல் சாசன சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்றும்,  கூறிஉள்ளது;

இது இல்லாமல், மற்றொரு சட்டமும் நடைமுறையில் உள்ளது; The Prevention of Insults to National Honour Act, 1971. இதில், தேசியக்கொடி, தேசியகீதம் இவைகளுக்கு கண்ணியக் குறைவை ஏற்படுத்தினால் அவை தண்டனைக்கு உரிய குற்றம் எனச் சொல்கிறது; அந்தச் சட்டத்தில் பிரிவு 3-ல், “தேசிய கீதம் இசைப்பதை வேண்டுமென்றே தடுத்து குழப்பத்தை உண்டாக்கினால், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், அல்லது அபராதமும், அல்லது இரண்டும் சேர்த்தும் தண்டனையாக வழங்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது; இதில் பிரிவு 2-ல் என்னென்ன வகைகளில் இந்த அவமதிப்பு என்பதாக கருதப்பட வேண்டும் என்று சொல்லப் பட்டுள்ளது; ஆனால் அதில் எங்கும், தேசியகீதம் இசைக்கும் போது கண்டிப்பாக எழுந்து நிற்க வேண்டும் என்று தனிப்பட்டு கூறப்படவில்லை என்று சட்ட வல்லுனர்கள் சொல்கிறார்கள்;

மேலும், இந்திய தண்டனைச் சட்டம் என்னும் The Indian Penal Code, 1860 என்ற பொதுவான சட்டமும் உள்ளது; அதில், தேசியகீதத்தை அவமதிக்கும் செயலுக்கு தண்டனையாக தனியே எந்தப் பிரிவும் சொல்லப்பட வில்லையாம்;

கேரளாவில் திரைபடவிழாவில், தேசியகீதம் இசைக்கும் போது எழுந்து நிற்காத அந்த ஆறு பேர்களையும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188-ல் குற்றம் சுமத்தி இருக்கின்றனர்; அந்தப் பிரிவு என்னவென்றால், “ஒரு அரசு அதிகாரி (Public Servant) உத்தரவை மதிக்காமல் நடந்து கொண்டால் கொடுக்கும் தண்டனை சார்ந்தது”; பப்ளிக் அதிகாரி என்ற விளக்கத்தில் நீதிபதியும் அடங்கும்; ஆதனால் ஐபிசி பிரிவு 188-ன்படி, ஒரு பப்ளிக் அதிகாரியின் உத்தரவை மதிக்காமல் இருப்பது என்பதும் அடக்கம்;

ஆனாலும், சட்ட வல்லுனர்கள் கருத்து வேறாக உள்ளது; அது “பப்ளிக் அதிகாரியின் உத்தரவை மதிக்காதது என்பது மட்டுமே தண்டனைக்கு உரிய குற்றம் என கருதிவிட முடியாது என்றும், அதனால் குழப்பம் உண்டாக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணம் இருக்க வேண்டும் என்றும், அந்த கெட்ட எண்ணத்துடன் அந்த உத்தரவை தடுத்து இருக்க வேண்டும் என்றும் இருந்தால்தான் அது தண்டனைக்கு உரியதாகும் என்று சட்ட வல்லுநர்கள் கருதுகிறார்கள்;

இந்திய அரசியல் சாசனச் சட்டத்தில், பிரிவு 19 உள்ளது; அதில் தனிமனித உரிமைகள் என்னும் பேச்சுரிமை, போன்றவை பற்றிச் சொல்லப் பட்டுள்ளது; ஆனாலும் அதற்கு ஒரு வரையறையும் உண்டு; பேச்சுரிமை என்பது இஷ்டத்துக்குப் பேசுவது என்பதாக கருதக் கூடாது; சட்டக் கட்டுப்பாட்டுக்குள் பேச உரிமை உண்டு என்றே கருத வேண்டும்;

எனவே இந்த கேரளா வழக்கு எப்படி இருக்கும் என்று இனிமேல்தான் தெரியவரும்;
**


No comments:

Post a Comment