Thursday, July 9, 2020

Profit a Prendre புராபிட் எ பிரன்டர்

Profit a Prendre புராபிட் எ பிரன்டர்:

புராபிட் எ பிரன்டர் (Profit a Prendre) என்பது ஒரு பிரென்ஞ் சட்டச் சொல். பலனை எடுத்துக் கொள் என்று இதன் பொருள். அதாவது ஒரு நிலத்தில் கிடைக்கும் பலனை மட்டும் அந்த நிலத்தில் நுழைந்து எடுத்துக் கொள்ளும் உரிமை மட்டும். ஒரு நிலம் ஒருவருக்குச் சொந்தமாக இருக்கிறது. அதில் மரங்கள் வளர்ந்திருக்கின்றன. அந்த வளர்ந்த மரங்களை (Timber) வெட்டி எடுத்துக் கொள்ள மற்றொருவருக்கு அந்த நிலத்தின் சொந்தக்காரர் அனுமதி கொடுத்து இருந்தால், அவர் இந்த நிலத்தில் நுழைந்து அந்த மரங்களை மட்டும் வெட்டி எடுத்துக் கொள்ளலாம். அதற்காக மட்டுமே அவர் நிலத்தில் நுழைய முடியும். மற்றபடி நிலத்தில் அவர் உரிமை கொண்டாட முடியாது. அந்த நிலத்தில் உரிமை இருக்கிறது என்பதால் அங்கேயே நான் இருப்பேன் என்றும் சொல்ல முடியாது.

இதற்கு மாறாக, ஒரு சொத்தை ஒருவர் அதில் ஏதாவது தொழில் செய்ய அல்லது குடியிருக்க குத்தகைக்கு கொடுத்திருக்கிறார் என்றால், அந்த நிலத்தை அவர் (வாடகைதாரர்) தன் கைவசம் வைத்து அனுபவிக்க அவருக்கு அனுமதியுண்டு. அதாவது அந்த சொத்து  அவர் கைவசம் இருக்கும். சொத்தின் அவர் குடியிருக்கும் உரிமை உள்ளது.

ஆனால், புராபிட் அ பிரன்டர் என்பது நிலத்தில் நுழையும் உரிமை மட்டும் உள்ளது. மற்றபடி அந்த நிலத்தை அனுபவிக்கும் உரிமை கிடையாது. வாடகைக்கும், இந்த புராபிட் அ பிரன்டருக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். புராபிட் அ பிரன்டர் என்பது புராபிட் என்னும் வருமானத்தை அடைந்துகொள் என்ற பொருளில் சொல்லும் பிரென்ஞ் சட்ட வார்த்தை.

ஒரு குளத்தில் ஒருவருக்குச் சொந்தமாக இருக்கிறது அல்லது அந்த குளமும் அதில் உள்ள நீர் இருக்கும் நிலமும் ஒரு அரசாங்கத்துக்குச் சொந்தமாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்தக் குளத்தில் உள்ள மீன்களை மட்டும் (அவை வளர்ந்தவுடன்) பிடித்துக் கொள்ளும் உரிமையை அரசாங்கம் ஒருவருக்கு கொடுக்கிறது. அவர், அங்கு மீன்களை வளர்க்கலாம். அதற்கு இரை போடலாம். அதற்காக இந்த் குளத்தில் அவர் இறங்கி வேலை செய்யலாம். மீன்கள் வளர்ந்தவுடன் அவைகள் பிடித்துக் கொள்ளலாம். மற்றபடி அங்கு இருக்கும் நீரிலோ, அந்த அடி மண்ணிலோ, அந்தக் குளம் இருக்கும் நிலத்திலோ அவருக்கு உரிமை ஏதும் இல்லை. இப்படி விளைச்சலை எடுத்துக்  கொள்வது, அல்லது அதன் பலனை மட்டும் எடுத்துக் கொள்வதை புராபிட் அ பிரன்டர் என்று சொல்கிறது சட்டம்.

அந்தக் காலத்தில், ஆறுகளில் படகு, மோட்டர் படகு இவைகளை விட்டு, அதில் ஆட்களை கட்டணம் வாங்கிக் கொண்டு விடும் தொழில் செய்வர். இந்த உரிமையை அரசாங்கத்திடமிருந்து பெறுவர். ஒரு வருடமோ அல்லது பல வருடங்களுக்கோ இதைப் பெறுவர். அப்படி அந்த ஆற்றை உபயோகப் படுத்தும் போது, அவர் அந்த ஆற்றில் வேறு எந்த உரிமையும் கொண்டாட முடியாது. அதில் உள்ள பலனை மட்டும் அனுபவிக்க முடியும்.

இதில், வாடகை, குத்தகை போன்ற நிலத்தை, கட்டிடத்தை எடுத்து அதை உபயோக்கிக்கும் போது, அந்த நிலத்தை, கட்டிடத்தை அனுபவிக்கும் உரிமையை வாடகைதாரர் பெறுகிறார். அதுவரை நிலத்தின் சொந்தக்காரர் இந்த நிலத்தில் நுழைய முடியாது.

ஆனால் புராபிட் எ பிரன்டர் முறையில் பலனைப் பெறுபவர் நிலத்தில் எந்த தங்கும் உரிமையும், அனுபவிக்கும் உரிமையும் கொண்டாட முடியாது.

மேலும், இந்த புராபின் எ பிரன்டர் உரிமையை வேறு ஒருவருக்கு மாற்றம் செய்ய முடியும். அந்த உரிமை மாற்றத்தை பதிவுப் பத்திரம் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இதே போலவே காடுகளில் உள்ள மரங்களை வெட்டிக் கொள்வது, மேய்ச்சல் நிலங்களில் ஆடு மாடு மேய்த்துக் கொள்ளும் உரிமை, மாந்தோட்டத்தில் மாம்பழங்களை மட்டும் பறித்துக் கொள்ளும் உரிமை, போன்றவைகளும்  அடங்கும்.

**


No comments:

Post a Comment