Saturday, November 14, 2020

ஜமீன் சொத்து

 ஜமீன் சொத்து 

ரவிசர்லா என்னும் ஜமீனைச் சேர்ந்த சில ஊர்களை வாதிகளின் மூதாதையருக்கு 1843-ல் இருந்த பிரிட்டீஸ் அரசு பட்டயம் மூலம் எழுதிக் கொடுக்கிறது. அவ்வாறு கொடுக்கும்போது, இரண்டு நிபந்தனைகளை விதிக்கிறது. ஒன்று - பட்டயம் பெற்றவரின் வாரிசுகள் மட்டும் தொடர்ந்து அனுபவித்து வரலாம். இரண்டு - அந்த வாரிசுகள் யார் என்பதை அரசு தான் முடிவு எடுக்கும். இந்த இரண்டாவது நிபந்தனையைப் பொறுத்துத்தான் இந்த வழக்கு.


அந்த மூதாதையரின் வாரிசுகளாக வாதி, இந்த ஊரை விற்பதற்கு ஏற்பாடு செய்கிறார். அதற்காக அரசின் அனுமதியைக் கேட்கிறார். அரசு மறுத்து விடுகிறது. அந்த உத்தரவை எதிர்த்து இந்த வழக்கு. வாதியின் வாதம் என்னவென்றால் - அரசு பட்டயம் மூலம் கொடுத்த கிராமம் இது. இதன் உரிமை எங்களிடமே இருக்கிறது. எங்களின் வாரிசுகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டால்தான், அரசு பஞ்சாயத்து செய்து முடிவு சொல்லும் அதிகாரத்தை வைத்திருந்தது. எங்களின் சொத்தை விற்பனை செய்ய அரசு தடை சொல்ல முடியாது என்று வாதம். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட கீழ்கோர்ட் அவருக்கு விற்பனை செய்ய உரிமை உள்ளது என்று சொல்லி விட்டது. அதை எதிர்த்து அரசு சென்னை ஐகோர்ட்டுக்கு அப்பீல் செய்தது.


அதில் - இந்த சொத்து 1800 களில் அரசால் ஜமின்தாரி சொத்தாக கொடுக்கப் பட்டது. வெங்கட நரசிம்ம அப்பாராவ் என்பவருக்கு கொடுக்கப் பட்டது. 1820 களில் நரசிம்மா மீளமுடியாத கடன்காரர் ஆகி விட்டார். எனவே அப்போது இருந்த கலெக்டர் ரஸ்சல் இவருக்கு ஒரு கடிதம் எழுதி, ஜமீன் சொத்தை அரசுக்கு கொடுத்து விடும்படியும், அதற்குப் பதிலாக பென்சன் வாங்கிக் கொள்ளும்படியும் கேட்கிறார். அதற்கு நரசிம்மா “ஏற்கனவே பெரும் கடன் பிடியில் உள்ளேன். சொத்தையும் இழந்து விட்டால், கடன் கொடுத்தவர்களின் நம்பிக்கையையும் இழந்து விடுவேன்” என்று மறுக்கிறார். ஆனாலும் போர்ட் ஆப் ரெவின்யூ, கலெக்டரின் முடிவையே ஆதரிக்கிறது. ஆனாலும் ஜமின்தார் மீது இரக்கப்பட்டு, இ்ந்த ஜமின்தாரி ஊரை மேற்சொன்ன நிபந்தனைகளுக்கு உட்பட்டு கொடுக்கிறது. அதற்கு பின்னர் என்ன நடந்தது என்பதற்கு உரிய போதுமான ஆதாரம் இல்லை. 


இப்படியாக அது நரசிம்மாவின் வாரிசுகளுக்கு வருகிறது. நரசிம்மா இறந்து விடுகிறார். அவரின் இரண்டு மகன்களான சிம்மாத்திரி, வெங்கடாத்திரி இருவரும் சிறுவர்கள். அப்போது இருந்த கலெக்டர் சர் பிரடரிக் ஆடம் இவர்களின் கார்டியனை சம்மதிக்க வைத்து மாதம் ரூ.600 தருவதாக ஏழுதி வாங்கிக் கொண்டார். பின்னர் மைனர்கள் அதை மறுத்து விட்டார்கள். 


The Transfer of Property Act சட்டப்படி, ஒரு சொத்தை ஒருவருக்கு கொடுத்தால், அதில் உள்ள உரிமைகளை எல்லாவற்றையும் சேர்த்தே கொடுக்க வேண்டும். அவர் அதை யாருக்கு விற்க முடியாது என்று ஒரு நிபந்தனை போட்டு கிரயப் பத்திரம் எழுதிக் கொடுத்தால் அது செல்லாது. 


இப்படி சொத்துரிமை மாற்றுச் சட்டத்தில் சொல்லி இருந்தாலும், அது பொதுமக்களுக்கு மட்டும் செல்லுபடியாகும் சட்டம். ஆனால் ஒரு அரசு, இவ்வாறு சொத்தை ஒருவருக்கு கிராண்ட் என்னும் கிரயம் மூலம் கொடுக்கும்போது, அவ்வாறு நிபந்தனை விதிக்கலாம் என்று The Crown Grants Act XX of 1895 சொல்லி உள்ளது.


1858-ல்தான், பிரட்டீஸ் ராணி தன் நேரடி ஆட்சிக்கு இந்தியாவைக் கொண்டு வருகிறார். அதற்கு முன்னர், பிரிட்டீஸ் அரசின் கிழக்கு இந்திய கம்பெனி தான் இந்தியாவை ஆட்சி செய்தது. ஒரு கம்பெனி, ஜமீன் சொத்தை கொடுத்தது எப்படி, அரசு கொடுத்ததாக சொல்ல முடியும் என்ற கேள்வி எழுகிறது. இந்த ஜமீன் சொத்தை 1843-ல் கொடுத்து விட்டார்கள். 1858-ல் தான் பிரிட்டீஸ் ராணியின் அதிகாரத்துக்கு இந்தியா வருகிறது. அப்படி இருக்கும்போது, 1895-ல் வந்த கிரவுன் கிராண்ட் சட்டம் எப்படி செல்லுபடியாகும் என்ற கேள்வி வருகிறது. 


இந்த கிராண்டை பிரிட்டீஸ் கிழக்கு இந்திய கம்பெனி கொடுக்கும்போது Charter Act 1833 என்னும் சார்ட்டர் சட்டம் அமலில் இருக்கிறது. அந்த சட்டத்தின் படி, கிழக்கு இந்திய கம்பெனிக்குச் சொந்தமான எல்லா இந்திய பகுதி நிலங்களும் சொத்துக்களும், வியாபாரத் தொடர்புகளும், பிரிட்டீஸ பார்லிமெண்டின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்று சொல்லப் பட்டுள்ளது. அதற்கு கிழக்கு இந்திய கம்பெனியும் ஒப்புக் கொண்டுதான் இந்தியாவுக்குள் அது வியாபாரம் செய்ய வந்தது. பிரிட்டீஸ் ராணியின் கட்டுப்பாட்டில்தான் கிழக்கு இந்திய கம்பெனியும் அதன் சொத்துக்களும் இருந்தது. எனவே, கம்பெனி கொடுத்த ஜமீன் ஊர்கள், பிரிட்டீஸ் ராணியின் நிர்வாகத்தில் இருந்த பிரிட்டீஸ் அரசு கொடுத்ததைப் போலவே என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், கம்பெனிக்கு கொடுத்த சார்ட்டர் சட்டத்தில் அவ்வாறு ராணிக்காக என்றோ, பிரிட்டீஸ் அரசுக்காக என்றோ, குறிப்பிட்டு சொல்லவில்லை. எனவே பிரிட்டீஸ் அரசின் டிரஸ்டியாக கம்பெனி இருந்தது என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும் என்ற கேள்வி வருகிறது. 


பல வழக்குகளில், கிழக்கு இந்திய கம்பெனி, பிரிட்டீஸ் அரசின் அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டுதான் இந்தியாவில் ஆட்சி செய்தது என்று தீர்ப்புகளைக் கொடுத்துள்ளது. எனவே வாதியின் மேற்சொன்ன வாதத்தை ஏற்க முடியாது. 


The Indian Councils Act 1861 Sec.22 ல் கவர்னர்-ஜெனரல் இன் கவுன்சில் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்தார். அவருக்கு எந்த சட்டத்தையும் இயற்றும் அதிகாரத்தை அளிந்திருந்த்து. எனவே இந்தியாவில் எந்த சட்டத்தையும் அவரால் இயற்ற முடியும். பிரிட்டீஸ் பார்லிமெண்டுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் இருப்பதைப் போலவே, இந்தியாவில் உள்ள இம்பீரியல் பார்லிமெண்டும் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட அமைப்பே. 


இந்தியர்கள் எப்போது நிலங்களை விற்கும் அதிகாரம் பெற்றார்கள்.

The Madras Regulation Act XXV of 1802 (Sec.8)-ல் ஒரு சட்டம் வருகிறது. அதன்படி, இந்தியாவில் உள்ள நிலங்களை, அதை வைத்திருப்பவர்கள், வேறு யாருக்கும் விற்கும் உரிமை உண்டு என்றும், அதற்கு அரசாங்கத்தின் அனுமதி தேவையில்லை என்றும் சொல்கிறது. ஆனால் இந்த சட்டத்தின் படி, நிரந்தர வரி போட்ட நிலங்களை மட்டுமே அவ்வாறு விற்க முடியும். அதாவது அயன் நஞ்சை, அயன் புஞ்சைகளை மட்டுமே அவ்வாறு விற்க முடியும். (அயன் என்பது அரசு தனி உரிமையுடன் கொடுத்த நிலங்கள். அதில் அரசு, வரி மட்டும் வசூலித்துக் கொள்ளும் உரிமை உண்டு. அதை விற்க வாங்க முடியும்).


ஆனால் இந்த வழக்கில் இந்த ஜமீன் ஊர்கள், சனத் என்னும் பட்டயம் மூலம் கொடுத்த நிலங்கள். இதை இந்த 1802 சட்டத்தின்படி விற்க முடியுமா என்ற கேள்வி வருகிறது. அதற்கு அத்தகைய உரிமை கிடையாது என்பது உண்மை.


இந்த ஜமீன் ஊர்களை ரவிசெர்லா ஜமீன் என்பர். இதை பத்ராசலம் ராஜா நிர்வகித்து வந்தார். அவரே இந்த வழக்கை அரசுக்கு எதிராக தாக்கல் செய்துள்ளார். ஏன் இந்த ஜமீன் சொத்துக்களை விற்க முடியாது. அரசின் அனுமதி தேவையில்லை என்பது அவரின் வாதம். 


கீழ்கோர்ட், இந்த ஜமீன் சொத்துக்களை “சர்வ முகஷா” மானியம் என்று சொல்லி உள்ளது. அப்படிப்பட்ட மானியம் சொத்துக்களை அரசு திரும்ப எடுத்துக் கொள்ள முடியாது. 


சொத்துரிமை மாற்றுச் சட்டம் 1882 வருவதற்கு முன்னர், இந்தியாவில் அப்படிப்பட்ட ஒரு சட்டம் இல்லை. இந்த சட்டத்தை பொதுமக்கள் விற்பனை செய்யும் சொத்துக்களுக்கு கொண்டு வந்தார்கள். எனவே இரண்டு உயிருள்ள நபர்களுக்குள் நடக்கும் கிரயம், சொத்து மாற்றம் இவைகளுக்கு மட்டுமே இந்த சட்டம் செல்லும். அரசு, ஒரு சொத்தை யாருக்காவது கொடுத்தால், அதற்கு இந்த சொத்து சட்டம் பொருந்துமா? பொருந்தாது. அரசு, ஒரு சொத்தை கிராண்ட் என்னு்ம பட்டயம் மூலம் கொடுத்தால் அதில் இது விரும்பும் நிபந்தனைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். 



இந்த கிராண்ட் 1858-ல் வாதியின் தந்தை ராஜா வெங்கடாத்திரி அப்பாராவ் பகதூர் மற்றும் வாதியின் சித்தப்பா ராஜா சிம்மாத்திரி அப்பாராவ் பகதூர் இருவருக்கும் கொடுக்கப்பட்டது. அதில் இந்த ஜமீன் சொத்துக்களை விற்பனை செய்ய நேர்ந்தால், அரசின் அனுமதி வேண்டும் என்பது சரிதான் என்று முடிவு செய்த மதராஸ் ஐகோர்ட், அரசுக்கு சாதகமாக தீர்ப்பு கொடுத்து விட்டது.

*






No comments:

Post a Comment