Showing posts with label Promissory Note. Show all posts
Showing posts with label Promissory Note. Show all posts

Thursday, June 25, 2020

புராமிசரி நோட் எவ்வளவு காலம் செல்லுபடியாகும்?

புராமிசரி நோட்டு எவ்வளவு காலம் செல்லுபடியாகும்

ஒரு புராமிசரி நோட், அது எழுதிக் கொடுக்கப்பட்ட தேதியில் இருந்து மூன்று வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். மூன்று வருடம் முடிந்து விட்டால், அந்த புரோநோட் செல்லாது என்பதால், அதைக் கொண்டு அந்தப் பணத்தை வசூல் செய்ய வழக்குப் போட முடியாது என்று இந்திய லிமிடேஷன் சட்டம் 1963 சொல்கிறது.

அப்படி மூன்று வருடம் முடியப் போகும் புராமிசரி நோட்டை உயிர் உண்டாக்க வேண்டும் என்றால், அதற்கு இரண்டு வழிமுறைகள் உள்ளதாக இந்திய லிமிடேசன் சட்டம் 1963 சொல்கிறது.

முதல் முறை:

ஆனாலும், அந்த மூன்று வருடங்களுக்குள், அந்த புரோமிசரி நோட்டை எழுதிக் கொடுத்தவர் (கடன் வாங்கியவர்) அந்த புரோநோட் கடனுக்காக ஏதாவது ஒரு அசல் தொகை அல்லது ஏதாவது ஒரு வட்டித் தொகை செலுத்தி, அவ்வாறு செலுத்தப்பட்டது என்று அந்த புராமிசரி நோட்டில், அல்லது அதன் பின்பக்கத்தில் எழுதி தேதியுடன் கையெழுத்துப் போட்டால், அந்தத் தேதியிலிருந்து மேலும் மூன்று வருடங்களுக்கு செல்லுபடியாகும். இப்படியாக எத்தனை முறை வேண்டுமானாலும் தொடரலாம்.

இரண்டாவது முறை:

மற்றொரு முறையாக, அந்த புரோநோட்டுக்கு பகுதி அசல் தொகையோ, அல்லது பகுதி வட்டித் தொகையோ செலுத்த முடியாத சூழ்நிலையில் இருந்தால், அதற்கும் ஒரு மாற்று வழியாக, ஒரு ஒப்பு உறுதிச் சீட்டு என்னும் Acknowledgment of Liability என்ற உறுதிமொழியை எழுதிக் கொடுக்கலாம். அந்த உறுதிமொழியானது, அந்த புரோமிசரி நோட்டுக்கு, இதுநாள் வரை இவ்வளவு தொகை பாக்கி உள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறேன் என்று அன்றைய தேதியிட்டு கையெழுத்துச் செய்து எழுதிக் கொடுக்க வேண்டும். அந்த புரோ நோட்டில் அதை எழுதத் தேவையில்லை. அதற்குப் பதிலாக தனியாக ஒரு கடிதம் கொடுத்தால் போதும். அப்படிக் கொடுக்கப்பட்ட தேதியில் இருந்து மேலும் மூன்று வருடங்களுக்குச் செல்லுபடியாகும்.

இதில் முதல் வகையை லிமிடேசன் ஆக்ட் 1963-ல் பிரிவு 19 சொல்கிறது. (இதில் கடனில் ஒரு சிறு தொகையை, அசலுக்காகவோ அல்லது வட்டிக்காகவே கொடுத்து, (Payement towards either part of principal money or part of interest due) காலத்தை நீட்டித்துக் கொள்வது). வெறும் 10 ரூபாய் கொடுத்தால்கூடப் போதுமானது.

இரண்டாம் வகையை அதே சட்டத்தின் பிரிவு 18 சொல்கிறது. (இதில் பணம் ஏதும் கொடுக்காமல், கடன் பாக்கியாகவே உள்ளது ஒப்புக் கொண்டு ஒப்புகை உறுதிமொழி (Acknowedgement of debt) எழுதிக் கொடுத்து, காலத்தை நீட்டித்துக் கொள்வது).

ஒரு குழப்பமான வழக்கு:

இந்த வழக்கு 1936-ல் நடந்த வழக்கு. இதில் ஒருவர் கடன் வாங்கி இருக்கிறார். அதற்கு புராமிசரி நோட் எழுதிக் கொடுத்திருக்கிறார். பின்னர் அசல் தொகை முழுவதும் கொடுத்து விட்டார். அதுவரை கொடுக்க வேண்டிய வட்டித் தொகை ரூ.200 வருகிறது. அதை அவரால் அன்று கொடுக்க முடியவில்லை. எனவே அந்த வட்டித் தொகைக்கு தனியே ஒரு புராமிசரி நோட் எழுதிக் கொடுக்கிறார்.  ஆனாலும் அந்த வட்டித் தொகையை கொடுக்க முடியவில்லை.

பணம் கொடுத்தவர் வழக்குப் போடுகிறார். கடன் வாங்கியவரின் வாதம் என்னவென்றால், இந்த வட்டிப் புரோநோட்டில் நான் பணம் ஏதும் வாங்கவில்லை. வட்டிக்காக எழுதிக் கொடுத்தது. ஆனால் அசல் வாங்கிய புரோநோட்டு மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால், அந்த புரோநோட் காலாவதி ஆகிவிட்டது. எனவே வட்டிப் புரோநோட், லிமிடேசன் சட்டம் 1963-ன் பிரிவு 18-ன்படி Acknowldgement of liability என்னும் கடன் ஒப்புகை உறுதிமொழி ஆகாது என்று வாதம் செய்கிறார்.

ஏனென்றால், அந்த வட்டிப் புரோ நோட்டில், பழைய புரோ நோட் கடன் பாக்கி உள்ளது என்று ஒப்புகை செய்திருந்தால்தான், அது லிமிடேசன் சட்டம் பிரிவு 18-ன்படி ஒப்புகை ஆகும். ஆனால் இங்கு வட்டிக்கு எழுதிக் கொடுத்த புரோ நோட்டு, ரூ.200 பணம் கொடுக்க வேண்டும் என்று மட்டுமே எழுதப்பட்டுள்ளது. பழைய பாக்கி கடனாக இருக்கிறது என்று சொல்லி ஒப்புதல் உறுதிமொழி  (Acknowledgment of liability) ஏதும் அதில் எழுதிக் கொடுக்கவில்லை. எனவே இந்த வட்டிப் புரோ நோட் பிரிவு 18-ன் படி கடனின் காலத்தை நீட்டிக் கொடுக்காது. (அதாவது வட்டிப் புரோ நோட் மூன்று வருடங்களுக்கு உள் இருந்தாலும், அது பழைய புரோ நோட்டுக்கு எழுதிக் கொடுத்திருப்பதால், அதற்கு கால நீட்டிப்பு இல்லை என்று வாதம் செய்கிறார்.

இந்த 1963 லிமிடேசன் சட்டம் வருவதற்கு முன்னர் பழைய லிமிடேசன் சட்டம் நடைமுறையில் இருந்தது.  முதன் முதலில் வந்த லிமிடேசன் சட்டம் Act XIV of 1859.

பின்னர் வந்த சட்டம் Act XIX of 1871.

இதைத் தொடர்ந்து வந்த சட்டம் Act 1877.

அதைத் தொடர்ந்து வந்த சட்டம் Act 1908

தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் 1963

இந்த வழக்கு 1936-ல் நடந்த வழக்கு. எனவே 1908 வருட லிமிடேசன் சட்டம் அப்போது நடைமுறையில் இருந்தது.

இதே பிரச்சனை போன்று மதராஸ் ஐகோர்ட்டில் ஒரு வழக்கு வந்தது. Muthiah Chettiar v. Kuttayan Chetty, (1917) 6 LW 790. இதில், புரோ நோட்டின் பாக்கிப் பணத்துகாக உண்டி சீட்டு எழுதி வாங்கிக் கொள்ளப்பட்டது. இதில் தீர்ப்பாக, உண்டி எழுதிக் கொடுத்தது, லிமிடேசன் சட்டம் பிரிவு 20-ன்படி பணம் ஒப்புக் கொள்ளப்பட்டதாக கருத முடியாது என்று சொல்லி விட்டது.

மதராஸ் ஐகோர்ட்டின் மற்றொரு வழக்கான Mackenzi v. Thiruvengadathan, (1886) ILR 9 Mad 271 என்ற வழக்கில் Justice Muthusamy Aiyar and Justice Brandt இருவரும், to the effect that the writing must show that the payment was made towards the debt in question… என்று சொல்லி உள்ளார்கள்.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், வட்டிக்கு எழுதிக் கொடுத்த புரோ நோட், அது பழைய புரோநோட் கடனில் பாக்கி உள்ளது என்று தெளிவாகச் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கில் அவ்வாறு சொல்லப் படவில்லை.

ஆனாலும், கடன் கொடுத்தவரின் வாதம் என்னவென்றால், பழைய புரோ நோட் கடனை தீர்த்து விட்டார். அதில் வட்டிப் பாக்கியை வட்டிப் புரோ நோட் எழுதிக் கொடுத்து தீர்த்து விட்டார் என்று தான் கருத வேண்டும். எனவே வட்டிப் புரோ நோட் தனியே இயங்கும் என்று வாதம் செய்கிறார்.

அவரின் வாதத்தை ஏற்றுக் கொண்ட ஐகோர்ட், இந்த வட்டிப் புரோ நோட் காலதாமதம் ஆகவில்லை என்றும், அந்தப் பணம் கொடுக்க வேண்டிய பணம் தான் என்று தீர்ப்பு சொல்லிவிட்டது.

**

 

 


Saturday, August 2, 2014

புரோ நோட்

புராமிசரி நோட் அல்லது புரோ நோட்

அவசரத்துக்கு கடன் வாங்குவதற்கு இந்த புரோ-நோட்டைத் தான் எழுதிக் கொடுக்க வேண்டும். Promise செய்து எழுதிக் கொடுத்த நோட்டை Promissory Note என்று சொல்வர்.

பழைய காலத்தில், "IOU" (or) 'I owe you'  அல்லது "நான்  உனக்கு கடன் பட்டிருக்கிறேன்" என்று சுருக்கமாக எழுதிக் கொடுப்பார்களாம். இன்றும் கிட்டத்தட்ட அதே நடைமுறைதான்  பின்பற்றப்படுகிறது.

அதாவது, "On Demand, I (name) promise to pay Mr. (name) Rs…  with interest" என்று எழுதப்பட்டிருக்கும். இது அச்சிடப்பட்ட காகிதமாக கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஒருரூபாய்க்கு  ரெவின்யூ ஸ்டாம்பு ஒட்டி கையெழுத்துச் செய்து கொடுத்து கடன் வாங்கிக் கொள்வார்கள். அவசரத்துக்கு கடன் வாங்கிக் கொள்ள உதவுவதால், இதை ஸ்டாம்ப் பேப்பரில் எழுதிக் கொள்ளத் தேவையில்லை என்பதால், வெள்ளை பேப்பரில் எழுதி அதில் ரெவின்யூ ஸ்டாம்ப் மட்டுமே ஒட்டிக் கொண்டால் போதும் என்ற சட்டம் உள்ளது. ஸ்டாம்ப் பேப்பரில் எழுதக் கூடாது. ஆனாலும், பலர் இதை ஸ்டாம்பு பேப்பரில் எழுதினால், நல்லது என்றும், மதிப்பு அதிகம் இருக்கும் என்றும் நினைத்து எழுதுகிறார்கள். இது தவறு.

இந்த புராமிசரி நோட்டில் மேற்சொன்ன உறுதிமொழியைத் தவிர வேறு வாசகங்கள் இடம்பெறக் கூடாது. அப்போதும் இந்த புராமிசரி நோட்டு சட்டப்படி செல்லாததாகிவிடும். வேறுசிலர், 'இந்த பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என்றால், சொத்தின்மீது நடவடிக்கை எடுப்பேன் என்றும், காவல் நிலையத்தில் புகார் கொடுப்பேன் 'என்றும் மிரட்டல்போல எழுதி வாங்கிக் கொள்வார்கள். அப்படி எழுதி இருந்தாலும் அது செல்லாது.

புரோநோட் கடனில், பணத்தை வாங்கியவர் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால், அவர்மீது சிவில் கோர்ட்டில் மட்டுமே வழக்குப் போடமுடியும். காவல் நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்க முடியாது. ஆனாலும் சிலர் போலீஸில் புகார் கொடுத்தால் சுலபமாக வசூல் செய்துவிடலாம் என்று கருதி புகார் கொடுக்கிறார்கள். அந்த புகாரை போலீஸ் விசாரிக்கவே அதிகாரம் கிடையாது.

இந்த புராமிசரி நோட்டில் உள்ள முதல் வாசகம் "On Demand" என்று இருக்கும். அதற்கு 'கேட்கும்போது' திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அர்த்தம். எனவே அந்த புராமிசரி நோட்டில் 3 மாதத்தில் அல்லது 6 மாதத்தில் அல்லது ஒரு வருடத்தில் பணத்தை திருப்பித் தருகிறேன் என்றெல்லாம் எழுதக் கூடாது. ஆண்டிமாண்ட் என்ற வார்த்தையே போதுமானது.

ஒரு புராமிசரி நோட்டுக்கு அதிலுள்ள தேதியிலிருந்து மூன்று வருடத்திற்கு மட்டுமே மதிப்பு இருக்கும். அதற்குப்பின் அதுவே காலாவதி ஆகிவிடும். காலாவதியான புராமிசரி நோட்டை ஒன்றும் செய்ய முடியாது. அதைக் கொண்டு பணம் வசூல் செய்யவும் முடியாது. அதற்கு உயிர் உண்டாக்க வேண்டும் என்றால், பணம் வாங்கியவரே அதில் மறுபடியும் கையெழுத்துச் செய்து கொடுக்க வேண்டும்.

புராமிசரி நோட்டில் ஒருரூபாய்க்கான ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டினாலே போதும். அதில் எவ்வளவு பணத்துக்கு வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம். பணத்துக்கு ஏற்ப ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்ட வேண்டிய அவசியம் இல்லை. எல்லா பணத்துக்கும் ஒரே ஒருரூபாய் ரெவின்யூ ஸ்டாம்புதான்.

புராமிசரி நோட்டுக்கு சாட்சி யாரும் தேவையில்லை. இருந்த போதிலும், அதில் சாட்சியும் வாங்கிக் கொள்கின்றனர். தவறில்லை. சாட்சிகள் அவசியம் இல்லை என அந்த சட்டம் கூறுகிறது.

திருப்பிக் கொடுக்கும் சக்தி இருப்பவருக்கு மட்டும் கடன் கொடுத்தால் திருப்பி வசூல் செய்து கொள்ளலாம். அந்த வசதி இல்லாதவருக்குக் கொடுத்தால், எந்த கோர்ட்டுக்குப் போனாலும் வசூல் செய்ய முடியாது. பணம் இருப்பவரிடம்தான் கோர்ட்டும் வசூலித்துக் கொடுக்கும். சொத்தோ, பணமோ இல்லாதவரிடம் எதை வசூலிப்பது? எனவே கடன் கொடுப்பவர்களும் இதை கருத்தில் கொள்ளவேண்டும்.

.