Sunday, May 31, 2015

பாகப்பிரிவினை: 1

பாகப்பிரிவினை: 1
தனியொருவரே ஒரு சொத்தை வைத்திருந்தாலோ, வாங்கியிருந்தாலோ அந்த சொத்துக்கு பாகப்பிரிவினை என்னும் பிரச்சனை இல்லை. கூட்டாக வாங்கியிருந்தால்  (இரண்டுபேருக்கு மேல் சேர்ந்து வாங்கினால்) அதை ஒரு காலக்கட்டத்தில் பாகப் பிரிவினை செய்து கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்படும். அல்லது நமது பெற்றோர்கள், முன்னோர்கள் வாங்கிய சொத்தாக இருந்தால் அவர்களின் காலத்துக்குப்பின் அவரின் வாரிசுகள் அந்த சொத்தை பங்கு பிரித்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும்.
சொத்தில் பங்கு இருப்பவர்கள், அந்த சொத்தில் எவ்வளவு பங்கு ஒவ்வொருவருக்கும் சேர வேண்டும் என கணக்கிட்டு, சுமூகமாக அவர்களாகவே பாகப்பிரிவினையை செய்து, அதை ஒரு பத்திரமாக எழுதிப் பதிவு செய்து கொள்ளலாம்.
விவசாய நிலங்களை பாகம் செய்து கொள்ளும்போது, வாய்மொழியாகவே பேசி அவரவர் பங்கு நிலத்தை பாகமாகப் பிரித்துக் கொள்ளலாம். நம் குடும்ப பெரியவர்கள் முன்னிலையிலும் பேசிக் கொள்ளலாம். அதை பத்திரத்தில் எழுதிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு பங்குபிரித்தபடியே பட்டாவை மாற்றிக் கொண்டால் போதுமானது. பாகப்பிரிவினை என்பது “சொத்து மாறுதல்” என்ற கணக்கில் வராது. எனவே இந்திய பதிவுச் சட்டப்படி அதை பத்திரமாக எழுதிப் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என இந்திய சுப்ரீம் கோர்ட் பல வழக்குகளில் குறிப்பிட்டுள்ளது. இருந்தபோதிலும், நாம் அவரவர் ஞாபகத்துக்காக அதை ஒரு சீட்டில் (பேப்பரில் எழுதி) அதில் சம்மந்தப்பட்டவர்கள் கையெழுத்தையும் பெற்று ஒவ்வொருவரும் ஒரு காப்பியை வைத்துக் கொள்ளலாம். இதையே “வாய்மொழி பாகப் பிரிவினை” என்றும் “கூர்சீட்டு” (அதாவது கூர் போட்டுக் கொண்ட கணக்குச் சீட்டு) என்றும் சொல்கிறோம். அதை பத்திரப் பதிவு அலுலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏன் என்றால், அந்த கூர்சீட்டில் இன்றைய தேதியில் சொத்துக்களை பிரித்துக் கொண்டதாக எழுதிக் கொள்ளமாட்டோம். அதற்குப்பதிலாக, பங்குதாரர்கள் ஏற்கனவே வாய்மொழியாக சொத்தை முன்னரே பிரித்துக் கொண்டதாகவும், அதை இன்று ஒரு ஞாபகச் சீட்டாக எழுதிக் கொண்டோம் என்று தான் அதில் எழுதி இருக்க வேண்டும். ஆனால், இன்றே சொத்துக்களை பாகமாகப் பிரித்து எடுத்துக் கொண்டுள்ளோம் என்று எழுதி இருந்தால், அது சொத்தை மீது பரிமாற்றம் நடைபெற்றதாகக் கருதி, அதை பதிவு செய்ய வேண்டிய கட்டாயாமும் ஏற்பட்டுவிடும்.
மிக அதிகமானவர்கள் இந்த தவறை செய்திருக்கிறார்கள். பத்திரம் எழுதும் அனுபவம் இல்லாதவர்கள், எதையோ எழுதி வைத்து விடுகிறார்கள். பிரச்சனை என்று கோர்ட்டுக்குப் போகும்போது இத்தகைய பத்திரம் சட்டப்படி செல்லுமா, செல்லாதா என்ற சட்டப் பிரச்சனையே வந்துவிடுகிறது. எனவே சட்டம் தெரிந்தவர், அல்லது வக்கீல் மூலமாக இதை எழுதிக் கொள்வது நல்லது.

ஆனாலும், நகரங்களில் உள்ள சொத்துக்களை பிரித்துக் கொள்ளும்போது, பாகப் பத்திரம் எழுதி கண்டிப்பாக பதிவு செய்வதே சாலச்சிறந்தது. இங்கு பட்டா மாற்றிக் கொள்ள ஒரு பத்திரம் தேவைப்படும். மேலும், சொத்து பாகம் ஆகிவிட்டது என்பதற்கான சாட்சியம் (ஆதாரம்) இந்தப் பதிவான பாகப் பிரிவினைப் பத்திரம் தான். இல்லையென்றால், சொத்து இன்னும் பாகம் ஆகவில்லை என்றே கருத வேண்டியிருக்கும்.

No comments:

Post a Comment