Sunday, May 31, 2015

பாகப்பிரிவினை-2

பாகப்பிரிவினை -2
பிரிக்க முடிந்த சொத்தை சுலபமாகப் பாகம் பிரித்துக் கொள்ளலாம். பிரிக்க முடியாத சொத்தாக இருந்தாலோ, ஒரே சொத்தை பல பங்குதாரர்கள் பாகம் பிரித்துக் கொள்ள முடியாமல் இருந்தாலோ, அல்லது அவ்வாறு பிரித்தாலும் அந்தப் பங்கு மிகச் சிறிய பங்காக இருந்து அதை தனியாக அனுபவிக்க முடியாமல் போனாலும், அதை பங்கு பிரித்துக் கொள்ள முடியாது. அவ்வாறு பங்கு பிரித்துக் கொள்ள முடியாதபடி இருக்கும் சொத்தை, NOT DIVISIBLE BY METES AND BOUNDS என்று சட்டம் சொல்கிறது. அதாவது, நீள அகலத்துடன் தனித்தனி சொத்தாக (துண்டுகளாக) பிரிக்க முடியாத சொத்து என சொல்கிறது. இவ்வாறான சொத்துக்களை ஒருவரோ, இருவரோ அனுபவித்துக் கொள்ள விட்டுக் கொடுத்து விடலாம். அதற்குறிய பங்கின் பணத்தை மட்டும் கணக்கிட்டுப் பெற்றுக் கொள்ளலாம். மற்றவர் விட்டுக் கொடுப்பதை “விடுதலை பத்திரம்” எழுதி பதிவு செய்து கொண்டால் போதுமானது. அதை பாகம் பிரித்துக் கொள்ள தேவையில்லை.
ஒருவேளை, எல்லோருக்கும் அந்த சொத்தில் ஆசை இருக்கிறது என்றால், யார் அந்த சொத்தை எடுத்துக் கொள்வது என்று போட்டி வரும். அதுவும் பங்காளிகள் ஆனபின்னர் இது மிக அதிகமாகவே இருக்கும். இது ஒரு “மனம் சார்ந்த பிரச்சனை.” மற்றவர் நன்றாக இருந்துவிடக் கூடாது என்பதில் நாம் மிகக் கவனமாக இருப்போமாம்! நமக்கு அந்த எண்ணம் இல்லாவிட்டாலும், நம்மை சுற்றியுள்ளவர் அந்தச் சகுனி பாத்திரத்தை திறம்பட செய்து முடிப்பார்களாம்! அதற்கு எப்படியும் நாம் இரையாகிவிடுவோமாம்! மகாபாரதம் முழுக்க பங்கு பிரிக்கும் சண்டைதானே!!
இந்தப் பிரச்சனை வரும் என்றே, சட்டமும் அதற்குறிய வழிமுறையை சொல்லியுள்ளது. ஒரே சொத்தை பலர் எடுத்துக் கொள்ள விரும்பும்போது, அவர்களுக்குள் ஒரு சமாதானமான முடிவை எடுத்து, அந்தச் சொத்தை ஒருவர் அல்லது இருவர் அடையும்படியும், மற்றவர்களுக்கு ஒரு நியாயமான பணத்தை கொடுத்து விடும்படியும் முடிவெடுத்துக் கொள்ளலாம். அவ்வாறு முடியாதபோது, அல்லது பங்காளிகளுக்குள் பகைமை ஏற்பட்டிருக்கும்போது, இது சாத்தியப்படாது என்பதால், சொத்துக்கு ஒரு விலையை நிர்ணயித்து அதைவிட அதிகமாக யார் விலைக்கு வாங்க விரும்புகிறார்களோ அவர்களுக்கு சொத்தை கொடுத்து விடுவது, மற்றவர்கள் பணத்தை பெற்றுக் கொள்வது என்பது ஒரு நியாயமான முடிவாக இருக்கும் என சட்டம் சொல்கிறது.

இதையும் தாண்டி, சொத்தில் பங்கு வேண்டும், பணம் வேண்டாம். கோடி ரூபாயாக இருந்தாலும் எனக்குத் தேவையில்லை. இது என் பாட்டன் சொத்து, இது என் அப்பன் சொத்து, இது என்னைப் பெற்ற தாயின் சொத்து, இவர்களின் ஞாபகார்த்தமாக (நினைவாக) ஒருபிடி மண்ணாவது எனக்கு சேர வேண்டும் என உலகிலுள்ள எல்லாத் தத்துவங்களையும் ஒருசேர அரசியல்வாதியைப் போல முழங்குவார்கள். பொதுவாக அதில் ஒரு உண்மையும் இல்லாதபோதிலும், வாதத்திற்காக அதை ஏற்கும் நிலை ஏற்படும். ஆனால் நடைமுறையில் இதற்கு எந்தவிதத்திலும் வழியே இல்லை. எனவே சட்டம் இங்கு நுழைந்து தன் வேலையைச் செய்யும். கோர்ட்டுகளுக்கு வழக்கு போகும். அங்கு அவரவர் பங்கு நிர்ணயம் ஆனபிறகு, சொத்தை “பொது ஏலத்தில்” விற்பனை செய்ய கோர்ட் உத்தரவிடும். அதில் “அப்பன், பாட்டன் சொத்தை வாங்க ஆசைப்படுபவர்களும் கலந்து கொள்ளலாம் என்றும், யார் அதிக விலை கேட்கிறார்களோ அவர்களுக்கு சொத்தை விற்பனை செய்ய உத்தரவாகும். இப்போது, பட்டான் சொத்தை கோடி கொடுத்து வாங்க முனைப்பு காட்ட மாட்டார்கள். அவர்கள் முன்னர் பேசிய தத்துவம் பொய்யாகிப் போய்விடும்.

No comments:

Post a Comment