Wednesday, June 3, 2015

பாகப் பிரிவினை-10

பாகப் பிரிவினை-10
இந்து மத சொத்தின் பாகப்பிரிவினையில் இறந்தவரின் மனைவிக்கு பிள்ளைகளைப் போலவே (மகன்கள் மகள்களைப் போலவே) ஒரு பங்குதான் உண்டு; அதாவது மொத்த மூன்று பிள்ளைகள் இருந்தால், அந்த பிள்ளைகள் மூன்றுபேரும் அந்த தாயும் சேர்ந்து மொத்தம் நான்கு பேர்கள் ஆவார்கள். இந்த நான்கு பேர்களும் தலைக்கு ஒருபங்கு வீதம் நான்கில் ஒரு பங்கு பெறுவர். அதாவது தாய்க்கு ஒரு பங்கு; அதாவது இறந்த கணவரின் சொத்தில் அவர் மனைவிக்கு நான்கில் ஒரு பங்கு. ஒருவேளை, ஏழு பிள்ளைகள் இருந்தால், 7+1=8 பேர்கள். அதில் அந்த தாய்க்கு எட்டில் ஒரு பங்கு;
இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956ல் இதுபோல சொல்லப்பட்டுள்ளது. ஆக, இந்து மதம் ஒருவரின் மனைவியை சிறப்பாக மதிக்காமல், பிள்ளைகளுடன் பங்கு பெற்றுக் கொள்ளட்டும் என பிள்ளைகளின் வரிசையில் நிற்க வைத்திருப்பது உண்மையில் கொடுமையே! கணவனின் சொத்தில் மனைவிக்கு ஒரு பெரும் பங்கை கொடுத்திருக்கலாம். செய்யவில்லை அந்தச் சட்டம்.
1956க்கு முன் இதுகூட இல்லை; 1956-க்கு முன்னர், இறந்தவரின் சொத்தில் மகள்களுக்கு பங்கே இல்லை. விதவை மனைவி மட்டும் மகன்களுடன் சேர்ந்து பங்கு பிரித்துக் கொள்ளும்போது, மகன்கள், பேரன்கள், கொள்ளுப்பேரன்கள் ஆகியோருடன், அவளின் கணவனுக்கும் (இறந்த கணவனுக்குத்தான்) ஒரு பங்கு ஒதுக்கி, அந்த கணவனின் பங்கை (அவர் இறந்ததால்) அவரின் விதவை மனைவி பெற்றுக் கொள்வார். அந்தப் பங்கைக்கூட அந்த விதவை மனைவி முழுஉரிமையுடன் அனுபவிக்க முடியாதாம். விதவையின் ஆயுட்காலம்வரை அதில் வரும் வருமானங்களை அடைந்து அனுபவித்து வந்து, (கிரயம் செய்ய உரிமையில்லை; அப்படியே கிரயம் செய்தாலும், விதவையின் ஆயுட்காலம்வரை தான் அந்தக் கிரயமும் செல்லும். அவரின் இறப்புக்குப்பின்னர், அந்த பங்கு மறுபடியும் மகன்களுக்கே சரிசமமாகப் போகும். பெண்களுக்கு சொத்தில் ஒருசிறு அளவு உரிமை கொடுப்பதற்கே வழியில்லாமல் இருந்தது;
பின்னர், சுதந்திரத்துக்குப் பின்னர், 1956ல் ஒரு புது சட்டம் வருகிறது; அது The Hindu Succession Act 1956 என்று பெயர்; அதில் பூர்வீகச் சொத்துக்களாக இருந்தால், அதில் பெண்களுக்கு ஒரு குழப்பமான சிறிய உரிமையை கொடுத்து விட்டு, மீதியை ஆண்களுக்கு கொடுத்து விட்டனர். இறந்த கணவனுக்கு கிடைக்கும் பங்கில், மகன்களும், மனைவியும், மகள்களும் பங்கு பெற்றுக் கொள்ளலாம் என்று இருந்தாலும், இறப்பதற்கு முன்னரே அவருக்கும் அவரின் மகன்களுக்கும் ஒரு பாகப்பிரிவினையை கற்பனையாக நடத்தி அதில் இறக்கும் தகப்பனார், மகன்கள், தலைக்கு ஒரு பங்கு எடுத்துக் கொள்வார்களாம்; பின்னர், இறக்கும் தகப்பனாரின் அந்த ஒரு பங்கில், மறுபடியும் எல்லா மகன்களும், மனைவியும், மகள்களும் பங்கு பிரித்துக் கொள்வார்களாம். இதிலும் கொடுமை என்னவென்றால், இறந்தவரின் மனைவிக்கு ஒரு சிறு பங்குதான் கிடைக்கும்; மகன்களுக்கு அதிக பங்கு கிடைக்கும்; இங்கும் மனைவிக்கு கொடுமையே நடந்திருக்கிறது;
1988ல், பின்நாளில் இதை தெரிந்து கொண்ட மகாராஷ்டிர மாநில அரசு, பழைய ஆந்திரபிரதேச அரசு, தமிழ்நாடு அரசு இவை மூன்றும், பெண்களுக்கும் (மகள்களுக்கும்) மகன்களைப்போலவே சரி சமமான பங்கை கொடுத்துவிட வேண்டும் என்று ஒரு திருத்தல் சட்டத்தை கொண்டு வந்து அதன்படி பங்கு பெற உரிமையை அளித்தது; அதன்படி அந்தச் சட்டம் அமலுக்கு வரும்போது, திருமணம் ஆகாமல், பிறந்தவீட்டில் இருக்கும் பெண்களுக்கு (மகள்களுக்கு) மட்டும் இது பொருந்தும் எனவும், அதற்கு முன், அதாவது இந்த சட்டம் வருவதற்கு முன், திருமணமாகி கணவன் வீட்டுக்கு சென்ற மகள்களுக்கு அவ்வாறு கேட்க உரிமையில்லை என்றும் அந்த சட்டம் விளக்கி இருந்தது;
இதுவும் ஓரளவே சரியான சட்டம்; இதுவும் குறையுடைய சட்டமே! எனவே மத்திய அரசு 2005ல் ஒரு திருத்த சட்டத்தை கொண்டு வந்தது, அதன்படி, பூர்வீகச் சொத்தில், மகன்களுக்கு எவ்வளவு பங்கு கொடுக்கிறோமோ அதேபோலவே மகள்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என சட்டம் கொண்டு வந்து அதுவே இப்போது நடைமுறையில் உள்ளது; அதில், அந்த பெண், திருமணம் ஆகி கணவன் வீட்டுக்குச் சென்றிருந்தாலும், திருமணம் ஆகாமல் பிறந்த வீட்டிலேயே இருந்தாலும், சரிபங்கு பெற அந்த பெண்ணுக்கு உரிமையுண்டு எனவும் விளக்கி இருக்கிறது.
இப்போதுள்ள சட்டப்படி, மகள்களுக்கு சம உரிமை கொடுத்திருக்கிறார்கள்; ஆனாலும், கணவனின் சொத்தில் மனைவிக்கு சிறப்பான உரிமை கொடுக்கவில்லை என்பது ஒரு பெரும் குறையே! மகன்களைப் போலவும், மகள்களைப் போலவும், மனைவியும் ஒரு பங்கு பெறுவாராம்!
மகனும் மகளும் மனைவியும் ஒன்று என்றும், பிள்ளைகளைப் போல தாயையும் (இறந்தவரின் மனைவியையும்) ஒரே தராசில் வைத்துப் பார்ப்பது, இந்து மதச் சட்டத்தின் ஒரு குறையாகவே கருதவேண்டியுள்ளது.
கிறிஸ்தவ மதச் சட்டம்
 கிறிஸ்தவ மதச் சட்டமான இந்தியன் வாரிசுரிமைச் சட்டம் 1925ன்படி, கணவன் இறந்தால், மனைவிக்கு மூன்றில் ஒரு பங்கு கொடுக்க வேண்டும். மீதி உள்ள மூன்றில் இரண்டு பங்கை மட்டும் பிள்ளைகள் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று இந்தச் சட்டம் சொல்கிறது. இது ஓரளவுக்கு பரவாயில்லை. இந்து சட்டத்தைக் காட்டிலும், ஒருபடி மேல்; மனைவிக்கு ஒரு சிறப்பு மரியாதை கொடுத்திருக்கிறது.
முஸ்லீம் சட்டம்
ஷரியத் என்னும் முகமதியர் சட்டத்தில், பிள்ளைகள் இருக்கும்போது, மனைவிக்கு எட்டில் ஒரு பங்குதான்; பிள்ளைகள் இல்லாவிட்டால்தான் நான்கில் ஒரு பங்கு உரிமையுண்டு; அதேபோல, மனைவியின் சொத்தில் கணவனுக்கு (பிள்ளைகள் இருக்கும்போது) நான்கில் ஒரு பங்கு பெற உரிமையுண்டு;
இங்கு மனைவிக்கு எட்டில் ஒரு பங்கு என்பது, மனைவிக்கு முக்கியத்துவம் இல்லாததுபோலவே இருக்கிறது; காரணம் தெரியவில்லை; புனிதநூலான குரானிலிருந்து இந்த பங்குவிபரம் சொல்லப்பட்டுள்ளதால், இதன் காரணம் நபிகள் நாயகத்துக்கு மட்டுமே தெரியும்.
இவை எல்லாவற்றிலிருந்தும் தெரியவருவது ஒருவிஷயம் மட்டும்தான்; மனைவிக்கு ஒரு சிறப்பு அந்தஸ்த்து இன்னும் இந்தியாவில் கிடைக்கவில்லை.

வெளிநாடுகளில், டைவோர்ஸ் பெறும் மனைவிக்கு, கணவனின் சொத்தில் பாதி பங்கு கொடுக்க சட்டம் உள்ளது; அதைப் போலவே இந்தியாவிலும் கொண்டுவர முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனாலும், இறந்த கணவனின் சொத்தில் ஒரு சிறு பங்குதான் மனைவிக்கு கிடைக்கிறது என்பது வருத்தமே!!!

No comments:

Post a Comment