Friday, August 21, 2015

உயிலின் கதை-4

உயிலின் கதை-4
பின்னர் ஏற்பட்ட பிரைவி கவுன்சில் வழக்குகளில், இந்தியாவில் பெங்கால் பகுதியில் வசிக்கும் தயாபாக இந்துக்கள் தனது தனிச் சொத்துக்களை (பூர்வீகம் அல்லாத தானே சம்பாதித்த சொத்துக்களை) உயில் எழுதி அவர் விருப்பம் போல கொடுக்கலாம் என்று தீர்ப்பளித்து. அப்போது இந்த தீர்ப்பு இந்தியாவில் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது.


அப்போது தென்னிந்தியாவில், குறிப்பாக மதராஸ் பிரசிடென்சியில் உயில் எழுதுவது என்பது வழக்கத்தில் வேறு விதமாக இருந்தது. மகன்களுக்கு கிடைக்கும் பூர்வீகச் சொத்தை ஒருவர் வேறு யாருக்கும் உயில் எழுத முடியாது என்ற நிலை. தனிச் சொத்துக்கள் ஏதாவது இருந்தால் அதை அவர் தானமாக யாருக்கேனும் கொடுக்கலாம். குடும்பச் சொத்துக்களை, மகன்களைத்தவிர, வேறு யாருக்கும் உயிலாகவோ தானமாகவோ கொடுக்க முடியாத நிலை. ஆனால் ஒரு வழக்கில் பிரைவி கவுன்சில் ஒரு தீர்ப்பைத் தருகிறது. அதன்படி, ஆண்வாரிசு இல்லாத ஒருவரின் அளவில்லாச் சொத்துக்களை, அவரின் மனைவிக்கும் மகளுக்கும் போதிய வசதி செய்துவிட்டு, மீதிச் சொத்துக்களை யாருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதலாம் என்றும் தீர்ப்புச் சொன்னது. இது பூர்வீகச் சொத்துக்களில் வாரிசுகளுக்கு வசதி செய்துவிட்டால் மீதிச் சொத்தை உயில் எழுதலாம் என்ற அடிப்படையில் தீர்ப்பு இருக்கிறது எனக் கருதினர். 

இதன்பின்னர், மதராஸ் பிரசிடென்சி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது, அதன்பெயர் 1892-ம் வருடத்தின் மெட்றாஸ் ரெகுலேஷன் சட்டம் (Madras Regulation V of 1892). இதன்படி ஒரு இந்து பூர்வீகச் சொத்துக்களைப் பொறுத்து, மகன்களுக்கு எதிராக, ஒரு உயில் எழுதிவிட முடியாது. தனிச் சொத்துக்களில் வேண்டுமானால், மகன்கள் இல்லாதபோது, மனைவி மகள்களுக்கு தேவையான பாதுகாப்பை செய்து வைத்துவிட்டு மீதிச் சொத்தை உயில்மூலம் வழங்கலாம் என்கிறது அந்த சட்டம். அதாவது, ஒருவர் தன்னால் மட்டுமே விற்பனை செய்யும் அதிகாரம் உள்ள சொத்துக்களை மட்டும் உயிலில் கொடுக்கலாம். மற்ற சொத்துக்களைப் பொறுத்து உயில் எழுதிவைத்துவிட முடியாது என்று மதராஸ், பாம்பே, கல்கத்தா பிரசிடென்சியின் அப்போதைய சட்ட நிலவரம்.

No comments:

Post a Comment