Sunday, October 4, 2015

ஜூவனைல் குற்றவாளிகள்

சிறுவர் குற்றவாளிகள்
இந்தியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை ஜூவனைல் (சிறுவர்) என்று இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் சொல்கிறது. (2000 வருடத்திற்கு பின்னர் வந்த ஜூவனைல் ஜஸ்டிஸ் சட்டப்படி, அந்த வயதை 18 ஆக வைத்திருக்கின்றனர்).

இந்த சிறுவர்கள் செய்த குற்றங்களை இரண்டு வகையாகப் பிரித்துக் கொள்கிறார்கள். மரண தண்டனை கொடுக்கும் குற்றம் மற்றும் ஆயுள்தண்டனை கொடுக்கும் குற்றம் இவைகளைச் செய்த சிறார்கள் ஒருவகை. மற்றொரு வகையில், இதற்கு குறைவான தண்டனை கொடுக்கும் குற்றங்களைச் செய்த சிறுவர்கள். முதல் வகை குற்றத்தை செய்த (மரண தண்டனை, ஆயுள் தண்டனை பெறும் குற்றத்தை செய்த) சிறுவர்களை தலைமை குற்றவியல் மாஜிஸ்டிரேட் கோர்ட் மட்டுமே (Chief Judicial Magistrate) விசாரிக்க வேண்டும் அல்லது சிறுவர்களை விசாரிப்பதற்கென்றே ஏற்படுத்தப்பட்ட ஸ்பெஷல் கோர்ட் விசாரிக்க வேண்டும். இரண்டாம் வகை குற்றத்தைச் செய்த (மரணதண்டனை, ஆயுள்தண்டனை அல்லாத அதற்குக்குறைவான மற்ற தண்டனைகளை பெறும் குற்றத்தை செய்த) சிறுவர்களை மாஜிஸ்டிரேட் விசாரிக்க வேண்டும்.

ஐநா சபையின் சிறுவர்கள் உரிமை நடைமுறைப்படி (UNCRC United Nations Convention on Rights of the Child) சிறுவர் என்பவர் 18 வயதுக்கு கீழ் இருப்பவர் என்று கூறுகிறது. (இந்தியாவில் 16 வயதுக்கு கீழ் இருப்பவர் சிறுவர் என்று இந்திய சட்டம் சொல்லி வந்தது) இப்போது அதை மாற்றி, 18 வயதுக்கு கீழ் இருப்பவரை சிறுவர் என்று சொல்கிறது. அது, 2000 வருடத்திய சட்டமான The Juvenile Justice (Care and Protection of Children) Act 2000 என்ற சட்டம் மூலம் வயது உயர்த்தப்பட்டது.

இந்திய தண்டனை சட்டம் (The Indian Penal Code-IPC) பிரிவு 82ன்படி 7வயதுக்கு உட்பட்ட குழந்தை ஒரு குற்றத்தை செய்தால் (கொலையே செய்திருந்தாலும்) அது ஒரு குற்றம் என சட்டம் கருதாது. எனவே 7 வயது குழந்தைக்கு எந்த தண்டனையும் கிடையாது. எந்த போலீஸ் விசாரனையும், கோர்ட் விசாரனையும் கிடையாது.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 83ன்படி ஏழு வயது தாண்டி 12 வயதுக்கு உட்பட்ட ஒரு குழந்தை ஒரு குற்றத்தைச் செய்திருந்தால், அதை ஒரு குற்றமாக கருத முடியாது என்கிறது சட்டம். ஆனால் இந்த 7 முதல் 12 வயதுள்ள உட்பட்ட குழந்தை செய்த குற்றத்தை, அது அறிவு வளர்ச்சி இல்லாமல் செய்ததா அல்லது வேண்டுமென்றே செய்ததா என்று பார்க்க வேண்டும். தான் செய்வது என்னவென்று தெரியாமல் அந்த தவறைச் செய்திருந்தால் அது குற்றம் அல்ல. இல்லையென்றால் அது சிறுவர் செய்த குற்றமே என்கிறது சட்டம்.

இப்போது 2014ல் இந்த சிறுவர் வயதை தற்போதுள்ள 18லிருந்து பழைய மாதிரியே 16 ஆக குறைக்க சட்டம் கொண்டுவர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 16 முதல் 18 வயது சிறுவர்கள் அதிக குற்றல்களை செய்வதால் இந்த குழப்பமான நிலை ஏற்படுகிறது.


No comments:

Post a Comment