Tuesday, May 24, 2016

கணவரின் சொத்தில் மனைவியின் பங்கு

பழைய இந்து சட்டப்படி, ஒரு இந்து, அவரின் சொத்தை விட்டுவிட்டு இறந்துவிட்டால், அந்த சொத்தில் அவரின் மனைவிக்கு பங்கு ஏதும் இல்லை என்ற நிலை இருந்தது. இறந்தவரின் ஆண் வாரிசுகள் மட்டுமே, பூர்வீக சொத்து என்ற நிலையில் அந்த சொத்தை பங்குபோட்டுக் கொள்வார்கள். இறத்தவருக்கு மகள் இருந்தாலும், அவருக்கு எந்தப் பங்கும் கிடைக்காது. அவர் வேறு வீட்டுக்கு திருமணம் ஆகிப் போனவர் என்று கருதி, சொத்தில் பங்கு கொடுக்க மாட்டார்கள். அந்த பெண், திருமணம் ஆகாமல், பிறந்த வீட்டிலேயே இருந்து வந்தால், அவரின் திருமணச் செலவை, அவரின் தகப்பனாரோ, அவர் உயிருடன் இல்லை என்றால், அவரின் மகன்களோ (அந்தப் பெண்ணின் சகோதரன்களோ) நடத்தி வைக்கவேண்டும் என்று அந்த சட்டம் சொல்கிறது.
இறந்தவரின் மனைவி நிலையும் அதுவே; அவர் உயிருடன் இருக்கும்வரை அவரின் மகன்கள் அவரை பராமரித்து வர வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிலை 1937ல் மாறிவிட்டது. அப்போது கணவர் சொத்தில் பெண்களின் உரிமை என்ற சட்டம் வந்தது. அதன்படி, கணவர் இறந்து விட்டால், அவருக்கும் அவரின் மகன்களுக்கும் சொத்தைப் பிரித்துக் கொள்வதுபோல நினைத்துக் கொள்ள வேண்டுமாம். அதாவது, இறந்த தகப்பனும், உயிருடன் இருக்கும் மகன்களும் பங்கு பிரித்துக் கொள்வார்கள். இறந்த தகப்பன், உயிருடன் இருக்கும் கடைசி மூச்சு நேரத்தில் இந்த பாகப் பிரிவினை நடப்பதாக கற்பனை செய்து கொள்ள வேண்டுமாம். 

அவ்வாறு நடக்கும் கற்பனை பாகப் பிரிவினையில், இறந்தவருக்கு ஒரு பங்கும், ஒவ்வொரு மகனுக்கு ஒவ்வொரு பங்கும் கிடைக்கும். இறந்த தகப்பன், அவர் இறப்பதற்கு ஒரு நிமிடம் முன்னர் கிடைத்த (கற்பனையாக நடந்த பாகப் பிரிவினையில் கிடைத்த) தன் ஒரு பங்கை விட்டுவிட்டு அடுத்த நொடி அவர் இறந்துவிடுகிறார் எனச் சட்டம் கருதுகிறது. அந்த பங்குதான், அவரின் மனைவியான விதவையின் பங்காக கிடைக்கிறது. அவ்வாறு மனைவிக்கு ஒரு பங்கு கிடைத்தாலும், அந்த விதவை மனைவி, அந்தப் பங்கை அனுபவிக்கலாமே தவிர, அவர் அதை விற்க முடியாது என்று சட்டம் சொல்கிறது. ஒருவேளை, அவருக்கு பணத் தேவை ஏற்பட்டு அந்த பங்கு சொத்தை விற்பனை செய்தாலும், அந்தக் கிரயமானது, அவர் உயிருடன் இருக்கும்வரைதான் அது செல்லுபடியாகும். அவர் இறந்தவுடன், அந்தக் கிரயம் செல்லாதது ஆகி, அவரின் வாரிசுகளுக்கே அந்த சொத்து திரும்ப வந்துவிடும். இவ்வாறு “திரும்ப வருவதை” ரிவர்ஷன் ரூல் என்றும் ரிவர்ஷனரி உரிமை” என்றும் அந்தச் சட்டம் சொல்கிறது.
இத்தகைய ஒரு இறுக்கமான சட்டம்தான் பெண்களுக்கு அன்றைய நாளில் இருந்து வந்தது. இதை மாற்ற நினைத்தனர். இந்தியா சுதந்திரம் அடைந்தபின்னர், 1956ல் இந்து வாரிசு உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது இந்த மாதிரியான விதவை மனைவிகளின் சொத்துரிமையை மாற்றியாது. அதாவது, இந்த சட்டம் 1956ல் வரும் நாளில் இருந்து, விதவை மனைவிக்கு கிடைக்கும் பங்கு “ஆயுட்கால உரிமை மட்டும்” என்று இல்லாமல், “முழுஉரிமையான சொத்து” என்று தானே மாறிவிடும். அத்தகைய மனைவி இப்படி அவருக்கு கணவரின் பங்காக சொத்தை சொத்தை, அந்த மனைவி, தன் சொத்தாகவே முழு உரிமையுடன் அனுபவித்துக் கொள்ளலாம், விற்றுக் கொள்ளலாம். அது ரிவர்ஷன் ரூல் படி திரும்பவும் அவரின் வாரிசுகளுக்குப் போய்ச் சேராது என்று அந்த சட்டம் தெளிவு படுத்தி உள்ளது.

ஆனாலும் அதிலும் ஒரு சிறு குழப்பம் ஏற்படுகிறது. ஒரு பத்திரம் மூலம் ஒரு பெண்ணுக்கு அவரின் ஆயுட்காலம் வரை அனுபவித்து வரும் உரிமையைக் கொடுத்த எழுதிய பத்திரமும் இவ்வாறே முழு உரிமையுடன் அவரைச் சேர்ந்துவிடுமா என்ற கேள்வி எழுகிறது. அப்படி முழு உரிமை போய்ச் சேராது என்கிறது அந்தச் சட்டம்.
அதாவது, கணவரின் சொத்தில் மனைவிக்கு ஜீவனாம்ச உரிமை உண்டு என்பது பொதுவான இந்து சட்டம். மனைவி உயிருடன் இருக்கும்வரை அவளின் கணவன் அவளை காப்பாற்ற வேண்டும். கணவன் இறந்துவிட்டால், கோபார்சனர்கள் என்னும் மகன்கள் காப்பாற்ற வேண்டும்.
எனவே, இறந்த கணவரின் சொத்தில் அவளின் ஜீவனாம்சத்துக்காக கிடைத்த பங்குதான் அவள் ஆயுட்காலம் வரை அனுபவித்து வரலாம் என்று 1937 சட்டம் சொல்லி இருக்கிறது. எனவே 1956 ல் புதிய சட்டம் வரும்போது, இப்படியான ஜீவனாம்ச உரிமை உள்ள மனைவியின் (பெண்களின்) சொத்தில் முழு உரிமை அடைந்து கொள்ளலாம் என்று மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலாக, யாராவது ஒருவர், அவரின் சொத்தை ஒரு பெண்ணுக்கு ஆயுட்காலம் வரை அனுபவித்து வரட்டும் என்ற உரிமையுடன் எழுதிக் கொடுத்த தானம், செட்டில்மெண்ட், உயில் பத்திரங்கள் அப்படியே செல்லும் என்றும், அதில் அந்த பெண்கள் “எங்களுக்கு முழு உரிமை உண்டு” என்று உரிமை ஏதும் கோர முடியாது என்றும் அந்த சட்டம் விளக்கி உள்ளது.
Sec.14 Property of a female Hindu to her absolute property:
(1)         Any property possessed by a female Hindu, shall be held by her as full owner thereof and not as a limited owner.
(Property includes both movable and immovable acquired by a female Hindu by inheritance or device, or at a partition, or in lieu of maintenance etc. and also any such property held by her as ‘Stridhana’ immediately before the commencement of this Act.)
(2)   Nothing contained in sub-section (1) shall apply to any property acquired by way of gift or under a will or any other instrument or under a decree, where the terms of the gift, etc prescribe a restricted estate in such property.
**


No comments:

Post a Comment