Saturday, July 30, 2016

அடமானக் கடன்கள் சட்டம்-(2)

அடமானக் கடன்கள் சட்டம்-(2)

இங்கிலாந்து அரசாட்சி நடந்த எல்லா நாடுகளிலும் கிட்டத்தட்ட இதே முறை அடமானங்கள்தான் இருந்திருக்கின்றன!
இங்கிலாந்து அரசு, இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த காலத்தில், முதல் சட்ட கமிஷன் என்னும் First Law Commission சட்ட வல்லுனர்களை நியமிக்கிறது; அதில் லார்டு ரோமிலி தலைமையில் கமிஷன் கூடுகிறது; இது நடந்தது 1870-ல்; அதில் சில முடிவுகள் எடுக்கிறார்கள்; அதை மறு பரிசீலனை செய்கிறது இரண்டாவது சட்ட கமிஷன்; இதில் சர் சார்லஸ் டர்னர் தலைமையில் மற்றும் பலர் இருக்கிறார்கள்; இதில் எடுத்த முடிவை விட்லி ஸ்டோக்ஸ் தலைமையில் சட்டசபையில் தாக்கல் செய்து ஒரு சட்டத்தை கொண்டு வருகிறார்கள்: அதற்குப் பெயர்தான் The Transfer of Property Act, 1882: இதை சொத்து மாற்றுச் சட்டம் 1882 என்று மொழி பெயர்த்துக் கொள்ளலாம்; இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட நாள்: 17.2.1882-ல்; இது நடைமுறைக்கு வந்த நாள்: 1.7.1882-ல்; ஆக இந்தியாவில் சொத்து மாற்றுச்சட்டம் நடைமுறைக்கு வந்த காலம் 1.7.1882-ல்: அதுவரை இந்தியாவில் பழங்கால அந்த அந்தப் பகுதி நடைமுறையே இருந்து வந்துள்ளது; இந்த சொத்து மாற்று சட்டம் பெரும்பாலும், இங்கிலாந்தில் ரியல் புராப்பர்ட்டி சட்டத்தை ஒட்டியே கொண்டுவரப் பட்டது;
பழைய இந்தியா பல பகுதிகளாகப் பிரிந்து கிடந்தபோது, ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பழக்க வழக்கம் முறைகள் இருந்திருக்கின்றன; சொத்துக்களை கிரயம் வாங்கிக் கொள்வது என்பது அவ்வளவாக இருந்திருக்க முடியாது; யாரும் மண்ணுக்கு உரிமையாளராக இருந்திருக்க முடியாது: மன்னர் தான் மண்ணுக்குச் சொந்தக்காரர்; சாட்டில் Chattel என்னும் அசையும் பொருள்கள் மட்டுமே மக்கள் உரிமை கொண்டாட முடியும் என்ற நிலை இருந்த காலம் அது; பின்னர், ஒரு காலக் கட்டத்தில், மண்ணை (நிலத்தை) அனுபவிக்கும் உரிமை வந்துள்ளது; மண்ணின் உரிமை மன்னருக்கு இருந்தாலும், அதை அனுபவித்து, விவசாயம் செய்து வரும் உரிமை குடிவார உரிமை மட்டும் இருந்திருக்கிறது; மண்ணின் மேல் உள்ள உரிமை (நிலத்தின் மேல் உள்ள உரிமை) மேல் வார உரிமை; அதில் குடி செய்யும் அல்லது விவசாயம் செய்து அதன் பலனை அடையும் உரிமை குடிவார உரிமை என்று பெயர்;
பொதுவாக ஜமீன் சொத்துக்களில் இப்படிப்பட்ட இரண்டு வகை (மேல்வாரம், குடிவாரம்) உரிமைகள் இருந்திருக்கின்றன; ஜமின்தார் நிலத்துக்கு சொந்தக்காரர்; அவர் அவரின் நிலத்தை விற்கலாம், அடமானம் வைக்கலாம்; அந்த நிலத்தில் பயிர் செய்யும் குடியானவர் வைத்திருக்கும் உரிமை குடிவாரம்; அவர் அந்த குடிவார உரிமையை விற்கலாம், அடமானம் வைக்கலாம்; இப்படியாக, ஒரு நிலத்துக்கு இரண்டு வகை உரிமையாளர்களும், இரண்டு வகை உரிமையும் தனித்தனியே இருந்திருக்கிறது என்பது ஆச்சரியமானதே!

**

No comments:

Post a Comment