Friday, October 21, 2016

சொத்துரிமை-3

சொத்துரிமை-3
இந்து விதவைகளின் சொத்துரிமை சட்டம் 1937:
(The Hindu Women’s Right to Property Act, 1937)
இந்தச் சட்டம் 1937ல் ஏப்ரல் 14ம் தேதி அமலுக்கு வந்தது; இந்தச் சட்டப்படி, கோபார்சனர்கள் என்று சொல்லப்படும் ஆண்கள் இறந்து விட்டால், அவர்களின் விதவை மனைவிகள் மட்டும் இந்த முறையில் சொத்துக்களை கீழ்கண்டபடி பெற உரிமையை ஏற்படுத்திக் கொடுத்தது இந்தச் சட்டம்; இதன்படி, கோபார்சனரி ஆண்கள் இறந்து விட்டால், அவரின் விதவை மனைவிகள், அந்த இறந்த கணவரின் பங்கை மட்டும் அடைந்து கொள்வர்; ஆனாலும், அந்த விதவை அவரின் வாழ்நாள்வரை மட்டும், அவரின் கணவரின் பங்கை, அனுபவித்து மட்டுமே வர முடியும்; கிரயம் செய்ய முடியாது; அப்படியே கிரயம் செய்தாலும், அந்தக் கிரயம் அந்த விதவையின் வாழ்நாள் வரை மட்டுமே செல்லும்; அதற்குப் பின்னர், அந்தச் சொத்து, அவளின் இறந்த கணவரின் மற்ற கோபார்சனர்களுக்கு திரும்ப வந்து சேர்ந்துவிடும்; ஆக, பெண்களுக்கு சொத்தை கொடுப்பதுபோலக் கொடுத்து அதை அனுபவிக்க மட்டும் கொடுத்துவிட்டு, விற்பனை உரிமையைக் கொடுக்காமல், விட்டு விட்டார்கள்; இதுதான் அன்றைய இந்து விதவைகளின் நிலை; ஆனாலும், அந்த விதவைகளிடம், சீதனச் சொத்துக்கள் (பெண்களின் தனிச் சொத்துக்கள்) இருந்தால் அதை அந்தப் பெண்கள் முழு உரிமையுடன் அனுபவித்துக் கொள்ளலாம்;

எனவேதான், பெரும்பாலும் பெண்கள் சீதனச் சொத்துக்களை வாங்குவதில் முனைப்புக் காட்டினர்; தமிழகத்தின் தென்பகுதியில், இப்படிப்பட்ட சீதனச் சொத்துக்களுக்கு “சிறுவாட்டுச் சொத்து” என்றும் பெயர் உண்டு; சிறுகச் சிறுகச் சேமித்து வாங்கப்பட்ட சொத்து என்று பொருள்; இத்தகைய சொத்துக்களில் பெண்களுக்கு தனிப்பட்ட முழு உரிமை உண்டு: அதில் அவர்களின் கணவர்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது; சீதனச் சொத்துக்களை விற்பனை செய்யும்போது, கணவரின் சம்மதமும் தேவையில்லை;

இப்படித்தான், பெண்களுக்கு தனிச் சொத்துரிமை வந்தது; ஆனாலும், இந்து கூட்டுக் குடும்பத்திலோ, கோபார்சனரி சொத்துக்கள் என்று சொல்லப்படும் ஆண்வழி பூர்வீக சொத்துக்களிலோ, பெண்களுக்கு எந்த உரிமையும் கொடுக்கப்படவில்லை;


No comments:

Post a Comment