Thursday, October 6, 2016

இந்திய வக்கீல்களும் வெளிநாட்டு வக்கீல்களும்:

இந்திய வக்கீல்களும் வெளிநாட்டு வக்கீல்களும்:

இந்தியாவின் சட்ட திட்டங்கள், ஆங்கிலேய ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப் பட்டது; பிரிட்டீஸ் அரசாங்கத்தின் சட்டதிட்டங்களே இந்தியாவிலும் அமல்படுத்தப் பட்டது; சில சட்டங்கள் மட்டும் இந்திய மண்ணுக்கும், கலாச்சாரத்திற்கும் ஏற்றாற்போல ஏற்படுத்தப் பட்டது;

இப்போதும் இந்தியாவில் உள்ள பெரும்பாலான சட்டங்கள் ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் ஏற்படுத்தப் பட்டவையே! சுதந்திரம் பெற்ற பின்னர், அதையே நாமும், ஏற்றுக் கொள்வதாக ஒரு சட்டம் ஏற்படுத்தி ஏற்றுக் கொண்டோம்; பொதுவாக, ஆங்கிலேய ஆட்சி நடந்த நாடுகளான காமன்வெல்த் நாடுகள் எல்லாவற்றிலுமே ஆங்கிலேய சட்டமே அடிப்படையாக இருக்கிறது என்றால் மிகையில்லை!

இப்படிப்பட்ட சூழலில், இப்போது ஒரு பிரச்சனை இந்திய நீதிமன்றங்களிலும், வக்கீல் சமூகத்திலும் நிலவி வருகிறது; இந்திய கோர்ட்டுகளில் இந்திய வக்கீல்கள் மட்டுமே தொழில் நடத்த வேண்டும் என்றும், எக்காரணத்தைக் கொண்டும் வெளிநாட்டு அல்லது அந்நிய நாட்டு வக்கீல்களை இந்திய கோர்ட்டில் அனுமதிக்க கூடாது என்றும் பெரும்பாலோர் கருதுகின்றனர்; தங்களது தொழிலில் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்று பயமும் ஒரு பெரிய காரணமாக இருக்கலாம்;

ஆனால் வேறுசிலர், வெளிநாட்டு வக்கீல்களை இந்திய கோர்ட்டுகளில் அனுமதிப்பதில் தவறில்லை என்றும், உலக நாடுகள் எல்லாம் பொதுவான வியாபார தொடர்புகளை கொண்டுள்ளதால், அது அவசியமும் கூட என்று சொல்கின்றனர்;

வழக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யும் வழக்காளி மக்கள், தங்களுக்கு பிடித்த அல்லது விருப்பமான வக்கீல்களை அமர்த்திக் கொள்வது என்பது அவர்களின் அடிப்படை உரிமை என்றும், அதை இந்திய வக்கீல்கள் தடை செய்ய முடியாது என்றும் வாதம் உண்டு;

அப்படி ஏற்படும் பட்சத்தில், இங்குள்ள தார்மீகத்தை மீறாமல், இந்திய வக்கீல்களுக்கும், வெளிநாட்டு வக்கீல்களுக்கும் சமமான ஆடுதளம் வேண்டும் என்றும், வக்கீல் பீஸ் கட்டணங்கள் வரையறுக்கப்பட வேண்டும் என்றும் ஒருசாரர் விரும்புகின்றனர்;

வேறுசிலர், அந்நிய நாட்டு வக்கீல்களை இந்திய மண்ணில் தொழில் நடத்த அடியோடு விடக்கூடாது என்று பிடிவாதமாக உள்ளனர்; அப்படி அவர்களை அனுமதித்தால், இந்திய சட்ட கலாச்சாரம் பாதிப்பதுடன், சாமானியன் கோர்ட்டை அணுக முடியாதவாறு அந்நிய நாட்டு வக்கீல்களின் பீஸ்-கட்டணம் இருக்கும் என்று பயப்படுகின்றனர்;

இந்தியாவில் உள்ள கோர்ட்டுகள், இன்னும் பிரிட்டீஸ் சட்ட நடைமுறைகளையே பின்பற்றுகிறது; வருடங்கள் கடந்தாலும், அதில் எந்த பெரிய மாற்றமும் ஏற்படவில்லை என்பதே எதார்த்தம்! இந்திய கோர்ட்டுகளில் எண்ணிலடங்கா வழக்குகள் தீர்ப்புக்காக காத்துக் கிடக்கின்றன; வழக்குகள் தேங்கியதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது; தேக்கத்துக்கு அனைத்து காரணங்களுமே காரணங்கள்தான்! இருந்தாலும், நாம் நீதி நிர்வாகத்தில் இன்னும் போதிய வசதியையும் விரைவையும் பெறமுடியாதற்கு, நாம் பின்பற்றி வரும் பழைய பிரிட்டீஸ் சட்ட அணுகுமுறைகளே பெரும்பாலான வழக்கு தேக்கத்துக்கு முக்கிய காரணம்;

எல்லா நாடுகளும் வேகமாக அடுத்த படிக்கட்டை தாண்டும்போது, இன்னும் நாம் இருக்கும் படிக்கட்டிலேயே இருப்பதே முக்கிய காரணம்; இதை எடுத்துச் செய்தவதற்கு இப்போது இருப்பர்கள் (அரசாங்கமும், நீதித்துறையும், வக்கீல்களும், சட்ட வல்லுனர்களும்) ஏன் முன்வரவில்லை என்ற காரணமும் தெரியவில்லை!

நீதித்துறையை இன்னும் வேகமாக கணணி மயம் ஆக்கவேண்டும்; கோர்ட் அன்றாட சட்ட நடைமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்; காலை மாலை என இரண்டு பிரிவாக கோர்ட்டுகள் இயங்க அனுமதிக்க வேண்டும்; பிரிட்டீஸ் சட்ட நடைமுறைகளை விட்டுவிட்டு, இன்றைய காலத்துக்கு ஏற்ப நடைமுறைகளை எளிதாக்கிக் கொள்ள வேண்டும் என்று இன்னும் எவ்வளவோ!

இப்போது ஒரு சிவில் வழக்கு கோர்ட்டுக்கு வந்தால், வருடக்கணக்கில், ஏன் பத்து வருடங்களுக்கு மேலும் நிலுவையில் உள்ளது; இந்த நடைமுறையை முதலில் மாற்றி, எந்த சிவில் வழக்கும் ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடத்திற்கும் முடித்தே ஆக வேண்டும் என்ற கட்டுப்பாடு வேண்டும்; அப்பீல் வழக்குகளை ஐகோர்ட் விசாரிக்காமல், மாவட்ட கோர்ட்டுக்கு அடுத்த “சர்க்யூட் கோர்ட்” (அமெரிக்காவில் உள்ளது போல) அல்லது மாவட்ட கோர்ட்டே கடைசி கோர்ட்டாக ஏற்படுத்த வேண்டும் (அதாவது மாவட்ட கோர்ட்டில் இப்போது இருப்பதுபோல ஒரேயொரு நீதிபதி விசாரனை என்ற முறை இல்லாமல், பெஞ்ச் நீதிபதிகளை கொண்ட முறையை கொண்டு வர வேண்டும்); மாநில ஐகோர்ட்டுகளின் சுமையை வெகுவாக இது குறைத்துவிடும்... இப்படி எத்தனை எத்தனையோ வழிமுறைகள் உள்ளன....

ஆனால், இப்போது, வெளிநாட்டு அரசுகள், அந்தந்த நாட்டு வக்கீல்களை இந்தியாவில் பிராக்டீஸ் செய்ய வைப்பதற்காக பிரமாண்ட் முயற்சிகளில் இறங்கி உள்ளன; அதில் வெற்றி பெறும் பட்சத்தில், இந்திய நீதித்துறையில் பெருத்த மாற்றம் ஏற்படும் என்றே யூகிக்கலாம்!
ஒருவேளை இந்திய வக்கீல்களும், நீதித்துறையும் இதுவரை செய்யத் தயங்கிய எல்லா விஷயங்களையும், வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள் இந்தியாவுக்குள் வந்தவுடன் கேட்டு வாங்கி அமல்படுத்திவிடும் என்று சிலர் நம்புகின்றனர்;

அப்போது, வழக்குக்காக கோர்ட்டுக்கு வரும் இந்திய மக்களுக்கு வெளிநாட்டு வக்கீல் நிறுவனங்கள் உதவியாக இருக்கும் என்றும், வக்கீல் கட்டணம்கூட குறைவாகவே இருக்கும் என்றும், பன்னாட்டு நிறுவனங்களுக்கிடையே போட்டியும் இருக்கும் என்றும் கருதலாம்; அப்போது இந்திய வக்கீல்கள் எந்த நிலையில் இருப்பார்கள் என்பது போகப் போகத்தான் தெரியும்.
**



No comments:

Post a Comment