Tuesday, May 2, 2017

சந்திரரேகா வழக்கு 1891-ல்

Chandrareka case
Chandrareka vs Secretary of State for India
Citation: (1891) ILR 14 Mad 163

சந்திரரேகா வழக்கு 1891-ல்;

நாட்டியம் ஆடும் குடும்பத்தில் ஒரு தாய்; அவள் இறந்து விடுகிறாள்; அவளுக்கு ஒரு பெண்ணும் ஒரு மகனும் உள்ளனர்; அவர்களில், அந்தப் பெண் ஒரு பெரிய வசதி படைத்தவருக்கு வைப்பாட்டி போல இருந்து வருகிறாள்; அவளுக்கும் அவளின் தொழிலுக்கும் துணையாக அவளின் சகோதரன் இருக்கிறான்; அவள், அந்தத் தொழிலில் பெரும்பணம் சம்பாதித்து விடுகிறாள்; ஆனால் சகோதரனுக்கோ ஒரு சில நூறுகளே கிடைக்கிறது;

தாயார் இறந்தவுடன், சகோதரன் வழக்குப் போடுகிறான்; இந்தச் சொத்துக்கள் எல்லாம், தாயாரின் சொத்துக்கள் என்றும், எனவே அவனுக்கும் சரிசமமாகப் பங்கு வேண்டும் என்று கேட்கிறான்; ஆனால் கோர்ட் பீஸ் கட்ட பணம் இல்லை; எனவே பாப்பர் என்னும் “நான் ஏழை; கோர்ட் கட்டணம் கட்ட முடியவில்லை” என்று வழக்குப் போடுகிறான்;

வழக்கில், சகோதரி, “இந்தச் சொத்துக்கள் எல்லாம் நான் என் கற்பை விற்றுச் சம்பாதித்தவைகள் ஆகும்; எனவே இது எனது தனிச் சொத்துக்கள்; என் தாயார் சொத்துக்கள் ஏதும் இல்லை; அவளின் சொத்துக்கள் ஒரு ரூ.200 தேறும்; எனவே என் சகோதரனுக்கு பங்கு கொடுக்க முடியாது என்று சொல்கிறாள்;

கீழ்கோர்ட் தீர்ப்பு – அவள் முறையற்ற தொழில் செய்து சம்பாதித்த சொத்துக்கள் என்பது உண்மையே! எனவே சகோதரனுக்கு அந்தச் சொத்தில் ஏதும் பங்கு இல்லை; தாயாரின் ரூ.200 சொத்தில் ரூ.100 பங்கு உண்டு: எனவே வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது; ஆனாலும், அவன் கோர்ட் கட்டணம் செலுத்தாமல் இந்த வழக்கை ஏழை என்று தாக்கல் செய்துள்ளான்; அவன் இறந்து விட்டான்; எனவே அவன் கட்டவேண்டிய கோர்ட் கட்டணத்தை அவனின் சகோதரியே அரசாங்கத்துக்கு கட்ட வேண்டும் என்று தீர்ப்பு;

இந்த தீர்ப்பை எதிர்த்து அவள் மதராஸ் ஐகோர்ட்டுக்கு அப்பீல் செய்கிறாள்;

அதில் என் தாயார் ஒரு கோயில் நாட்டியக்காரி; வறுமையில் இறந்து விட்டாள்; அவளுக்கு தனியே சொத்துக்கள் கிடையாது; அவளின் மகளான நான், என் குலவழக்கப்படி, பணக்காரர்களிடம் விபசாரம் செய்து அதில் நிறைய சம்பாதித்துள்ளேன்; இதில் எனது சகோதரனுக்கு எந்தப் பங்கும் இல்லை; எனவே கீழ்கோர்ட் தீர்ப்பு சரிதான்; மொத்த சொத்தும் எனக்குச் சொந்தம் என்று சொல்லியுள்ளது; என் சகோதரன் இறந்து விட்டான்; அவன் இந்த வழக்கை பாப்பர் என்று (ஏழை) கோர்ட் கட்டணம் செலுத்தாமல் தாக்கல் செய்தான்; அவனுக்கு சொத்து ஏதும் தீர்ப்பில் வழங்கவில்லை; ஆனாலும், கீழ்கோர்ட், அவன் அரசுக்கு கட்டவேண்டிய கோர்ட் கட்டணத்தை நான் செலுத்த வேண்டும் என்று சொல்வதில் நியாயம் இல்லை; என்று முறையிடுகிறாள்;

ஐகோர்ட் தீர்ப்பு: யார் கோர்ட் கட்டணம் செலுத்த வேண்டுமோ அவர் அந்த வழக்கை வென்றால், அதிலிருந்து கோர்ட் கட்டணம் செலுத்த வேண்டும்; இங்கு அவன் வழக்கில் தோற்று விட்டான்; அவனும் இறந்து விட்டான்; அவனிடம் ஒன்றுமில்லை; எனவே அவனின் கட்டணத்தை அவனின் சகோதரி செலுத்த வேண்டும் என்பதில் நியாமில்லை; எனவே அவள் கோர்ட் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று தீர்ப்பு வழங்கியது.
**



No comments:

Post a Comment