Monday, June 29, 2020

இந்தியப் பத்திரப் பதிவுச் சட்டம்

இந்தியப் பதிவுச் சட்டம்:

இதற்கு முன்னர் இருந்த பதிவுச் சட்டங்கள்:

இந்திய பதிவுச் சட்டம் 1864 (The Indian Registration Act XVI of 1864).

இந்திய பதிவுச் சட்டம் 1866 (The Indian Registration Act XX of 1866).

இந்திய பதிவுச் சட்டம் 1871 (The Indian Registration Act VIII of 1871).

இந்தியப் பதிவுச் சட்டம் 1877 (The Indian Registration Act III of 1877) இது ஏப்ரல் 1, 1877 முதல் அமலுக்கு வந்தது. இதில்தான், பதிவு செய்யப்படாத பத்திரங்களை ஒரு சாட்சியமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று கொண்டு வரப்பட்டது.

தற்போது நடைமுறையில் உள்ள இந்திய பதிவுச் சட்டம் 1908

(Act XVI of 1908).

இப்போதுள்ள பதிவுச் சட்டம் 1908-ல் மொத்தம் 15 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

அத்தியாயங்கள்;

1)     முன்னுரை

2)     பதிவுத்துறை- அலுவலகம்

3)     பத்திரங்களை பதிவது சம்மந்தமாக.

4)     பத்திரங்களை பதிவுக்கு கொடுக்கும் காலங்கள்.

5)     பத்திரங்களை எங்கு பதிய வேண்டும்.

6)     பத்திரங்களை யார் பதிய வேண்டும்.

7)     பத்திரப் பதிவுக்கு யார் யாரை அழைக்க வேண்டும்.

8)     உயில் பத்திரங்களைப் பதிவு செய்தல்.

9)     உயில் பத்திரங்களை வைப்பீடு செய்து வைத்தல்.

10)  பத்திரம் பதிவு செய்வதால் அல்லது பதியாமல் விடுவதால் ஏற்படும் சட்ட நிலை.

11)  பதிவு அதிகாரியின் கடமையும், உரிமையும்.

12)  பதிவு செய்வதை பதிவு அதிகாரி மறுக்கும் உரிமை.

13)  பதிவுக் கட்டணம், பதிவைப் பார்வையிடுதல்.

14)  தவறுகளுக்குத் தண்டனைகள்.

15)  பொதுவானவை.

**

இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய குறிப்புகள்:

1)     இந்தப் பதிவுச்சட்டம் 1908, ஜனவரி 1, 1909 முதல் அமலுக்கு வந்தது.

2)     பத்திரத்தில் Addition என்று சொன்னால், பத்திரத்தில் உள்ள பார்ட்டிகளின் பெயர், தகப்பனார் அல்லது தாயார் பெயர், வயது, அவரின் தொழில், அவரின் முகவரி போன்றவை.

3)     பத்திரத்தில் Book என்று சொன்னால், அந்தப் பத்திரம் எந்தப் புத்தக்கத்தில் பதிவாக வேண்டும் என்ற விபரம்.

4)     பத்திரத்தில் Endorsement and Endorsed என்று சொன்னால், பதிவு அதிகாரி, பத்திரம் பதிவு செய்யப்பட்டது என்று எழுதும் சான்றிதழ்.

5)     அசையாச் சொத்து Immovable property என்பது நிலம், கட்டிடம், வழிமுறையாகப் பெறும் அலவன்ஸ், பாதைவழி உரிமை, வெளிச்சம் கிடைக்கும் உரிமை, படகுத்துறை உரிமை, மீன்பிடிக்கும் உரிமை, நிலத்திலிருந்து கிடைக்கும் உரிமை, நிலத்தில் நிரந்தரமாகப் பதித்து வைத்துள்ள இயந்திரங்களின் உரிமை, இவைகள் அடங்கும். ஆனால், விளைந்து முடிந்த விறகு மரங்கள், விளைந்து கொண்டிருக்கும் பயிர்கள், புற்கள் இவை இதில் அடங்காது.

6)     அசையாச் சொத்து (Movable property) என்பது நிலத்தில் விளைந்து நிற்கும் விறகு மரங்கள் (Standing Timber), விளைந்து கொண்டிருக்கும் பயிர்கள், புற்கள், பழம், சாறு கொடுக்கும் மரங்கள், இவைகள்.

7)     Representative என்பவர், மைனருக்கு கார்டியனாக இருப்பவர், ஒரு குழுவுக்கு கமிட்டியாக இருப்பவர், பைத்தியமாக அல்லது அறிவிலியாக இருப்பவருக்கு சட்டத் துணையாக (Legal Curator) இருப்பவர், இவர்களைக் குறிக்கும்.

8)     ஒரு மாநில அரசு அளவில் Inspector General of Registration என்ற அதிகாரி இருப்பார். இவரே அந்த மாநிலத்தில் நடக்கும் பத்திரப் பதிவின் தலைமை அதிகாரி. அவருக்கு கீழ் மாவட்ட, துணை மாவட்ட அதிகாரிகள் பலர் இருப்பர்.

9)     ஒவ்வொரு பத்திரப் பதிவு அதிகாரியிடம், இந்தப் பதிவுக்கு தேவைப்படும் புத்தகங்கள், முத்திரைகள் இருக்கும்.

10)  சில பத்திரங்களை கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும் என்று சொல்லி உள்ளது. சில பத்திரங்களை பதிவு செய்ய வேண்டிய சட்டக் கட்டாயம் இல்லை என்றும் சொல்லி உள்ளது. பொதுவாக அசையாச் சொத்துக்களின் உரிமை மாற்றங்களை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.

11)  பொதுவாக கோர்ட் கொடுக்கும் தீர்ப்புகள், டிகிரிகள் இவைகளைப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், வழக்கில் சம்மந்தம் இல்லாத சொத்தைப் பொறுத்து ஏதாவது டிகிரியில் சொல்லி இருந்தால், அந்த டிகிரியை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

12)  கோர்ட்டே ஒரு அசையாச் சொத்தை அதன் உத்தரவின் பேரில் ஏலம் கொண்டு வந்து விற்பனை செய்து அதன்படி Sale Certificate கொடுத்தால், அதைப் பதிவு செய்யவேண்டிய கட்டாயம் இல்லை.

13)  ஆனால், பார்ட்டிகளின் விருப்பத்தின்பேரில், கோர்ட்டில் ஒரு சொத்து ஏலம் விடப்பட்டு, அதை ஏலம் எடுத்தவருக்கு கோர்டே பத்திரம் எழுதிக் கொடுத்தால், அதை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

14)  கோர்ட் அல்லது ஒரு அரசு அதிகாரி (Income Tax, Sales Tax)  ஒரு சொத்தை ஜப்தி செய்திருந்தால் அதை பதிவு செய்யத் தேவையில்லை. அதை பதிவு அதிகாரிக்கு தெரியப் படுத்தினால் போதும்.

15)  ஒரு பத்திரத்தை எழுதும்போது, அதை அந்த உள்ளூர் மொழியில் எழுத வேண்டும் அல்லது ஆங்கிலத்தில் எழுத வேண்டும். பதிவு அதிகாரிக்கு தெரியாத மொழியில் எழுதி இருந்தால், அதன் ஆங்கில மொழிபெயர்ப்புடன் பதிவுக்குக் கொடுக்க வேண்டும்.

16)  பத்திரத்தில், எந்த அடித்தல், திருத்தல், சேர்த்தல், இடைச்செருகல், என்று என்ன மாற்றம் செய்திருந்தாலும், அதற்குப் பக்கத்தில் பார்ட்டிகளின் ஒப்புதல் கையெழுத்து இருக்க வேண்டும். இல்லையென்றால், அதை பதிவு செய்ய அதிகாரி மறுக்க உரிமையுண்டு.

17)  பத்திரத்தில் சொத்தைப் பற்றி குறிப்பிடும்போது, தெளிவான விபரங்கள், அல்லது வரைபடங்கள், சர்வே எண்கள், (சொத்தை சரியாக அடையாளம் காட்டும் விரபங்கள்) கொடுத்திருக்க வேண்டும். இல்லையென்றால் பதிவு மறுக்கப்படும்.

18)  எந்தப் பத்திரத்தையும், அதை எழுதிய தேதியிலிருந்து நான்கு மாதங்களுக்குள் அதைப் பதிவுக்கு கொடுத்து விட வேண்டும். (உயில் பத்திரத்துக்கு இந்த காலவரம்பு கிடையாது, எப்போது வேண்டுமானாலும் பதிவு செய்யலாம்).

19)  ஒரே பத்திரத்தில், பலர் வெவ்வேறு தேதிகளில் கையெழுத்துச் செய்து இருந்தால், அவரவர் கையெழுத்துச் செய்திருந்த தேதியிலிருந்து நான்கு மாதங்களுக்குள் பதிவுக்கு கொடுக்க வேண்டும்.

20)  ஒருவேளை அந்த நான்கு மாதங்களுக்குள் பத்திரம் பதிவு செய்ய முடியாமல் போய்விட்டால், அதே பதிவு அதிகாரி மூலமாகவே மாவட்ட அதிகாரிக்கு மனுச் செய்து, தகுந்த காரணம் சொல்லி இருந்தால், மேலும் நான்கு மாதங்கள் கால அவகாசம் பெற்றுக் கொள்ளலாம்.

21)  ஒருவேளை, ஒரு பத்திரத்தை, தெரியாமல் வேறு ஒரு பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டால், அந்தப் பத்திரம் செல்லுபடி ஆகாது. எனவே இதைத் தெரிந்த நாளிலிருந்து நான்கு மாதங்களுக்குள் சரியான அலுவலகத்தில் “மறுபதிவு” (Re-registration) செய்து கொள்ள வேண்டும்.

22)  இந்தியாவுக்கு வெளியே ஒரு பத்திரம் எழுதப்பட்டால், அது இந்தியாவுக்குள் வந்த நாளிலிருந்து நான்கு மாதங்களுக்குள் பதிவு செய்து விட வேண்டும்.

23)  உயில் பத்திரத்தை பதிவு செய்ய கால அவகாசம் ஏதும் இல்லை. உயில் எழுதி பல ஆண்டுகள் கடந்தாலும், அதை எப்போது வேண்டுமானாலும் பதிவு செய்து வைக்கலாம்.

24)  அசையாச் சொத்தின் (Immovable property) உரிமை மாறும் பத்திரங்களான, கிரயம், அடமானம், தானம், செட்டில்மெண்ட், பாகப்பிரிவினை, விடுதலை, கோர்ட் டிகிரி, போன்ற பத்திரங்களை அந்த சொத்து இருக்கும் பதிவாளர் அலுவலகத்தில்தான் பதிவு செய்ய வேண்டும்.

25)  அசையாச் சொத்தின் உரிமை மாறும் தன்மை இல்லாத கோர்ட் டிகிரிகளை எந்த பதிவு அலுவலகத்தில் வேண்டுமானாலும் (வழக்கின் பார்ட்டிகளின் விருப்பத்தின் பேரில்) பதிவு செய்து கொள்ளலாம்.

26)  உடல்நிலை சரியில்லாதவர், பத்திரம் பதிவு செய்ய வேண்டி இருந்தால், பதிவாளர் அவர் இல்லம் சென்று பதிவு செய்து கொடுக்கலாம்.

27)  ஒரு பத்திரத்தை எழுதிக் கொடுத்தவர் அதை பதிவுக்குத் தாக்கல் செய்ய வேண்டும். அல்லது அவரின் முகவர் (Agent) அதை பதிவுக்குத் தாக்கல்  செய்ய வேண்டும். அல்லது அந்த பத்திரத்தின் மூலம் உரிமை பெறுபவர் அதை பதிவுக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.

28)  பவர் ஏஜெண்டுகள் பத்திரத்தை எழுதிக் கொடுக்கலாம், அதைப் பதிவு செய்து கொடுக்கலாம்.

29)  பவர் பத்திரத்தின் மூலம் பவர் ஏஜெண்டுகளை நியமிக்கும்போது, இந்தியாவுக்குள் அந்தப் பவர் பத்திரம் எழுதி இருந்தால், இந்தியாவில் உள்ள ஒரு பதிவு அதிகாரி முன்னர் அதைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

30)  இந்திய எல்லைக்கு வெளியே ஒரு பவர் பத்திரம் எழுதப் பட்டிருந்தால், அந்த நாட்டில் உள்ள நோட்டரி பப்ளிக் என்னும் அந்த நாட்டின் வக்கீல் முன்னர், அல்லது அப்படி ஒருவர் இல்லையென்றால், அந்த நாட்டில் உள்ள இந்தியப் பிரதிநிதியான கான்சல் அதிகாரி முன்னர் அதைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

31)  உடல்நிலை சரியில்லாதவர், சிறையில் இருப்பவர், அரசு அதிகாரி இவர்கள் இப்படி ஒரு பவர் பத்திரம் கொடுத்திருந்தால் அதை பதிவு அதிகாரி முன்னர் சென்று பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

32)  ஒரு பத்திரத்தை பதிவுக்கு கொடுத்தால், அதை அவர்தான் எழுதிக் கொடுத்தார் என்பதை பதிவு அதிகாரி முன்னர் சென்று ஒப்புக் கொள்ள வேண்டும். இதை Admission of execution என்கிறது சட்டம்.

33)  அவர் அந்தப் பத்திரத்தை எழுதிக் கொடுக்கவில்லை என்று மறுத்தால், பதிவு அதிகாரி அந்தப் பத்திரத்தை பதிவு செய்யாமல் பதிவை மறுத்து விட வேண்டும்.

34)  ஒரு பத்திரம் பதிவு செய்யப்பட்டு விட்டால், அதை எழுதிய தேதியிலிருந்து அந்தப் பத்திரம் அமலுக்கு வருவதாகச் சட்டம் கருதுகிறது. (பத்திரத்தில் எழுதிய தேதி தான் சொத்து விற்பனை செய்த தேதி. மாறாக பத்திரம் பதிவு செய்த தேதியை கணக்கில் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. பலர், பத்திரப் பதிவு தேதியையே தவறுதலாக, பத்திரத்தின் தேதியாக நினைத்துக் கொள்கிறார்கள். இது தவறு).

35)  ஒரு பத்திரம் பதிவு செய்யப்பட்டிருந்தால், அதுவே முன்னுரிமை பெறும். அதற்குப் பின்னர் எழுதிய பத்திரம் செல்லாது. அதாவது  இரண்டு பதிவு செய்த பத்திரங்களுக்குள், எது முந்தி எழுதப்பட்டதோ அதுவே செல்லும். அதை பின்னர் பதிவு செய்திருந்தாலும் பரவாயில்லை.

36)  ஒரு பத்திரம் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்று இந்த பதிவுச் சட்டத்தில் சொல்லி இருந்து, அது பதிவு செய்யப்படாமல் இருந்தால், அதை ஒரு சாட்சியமாக கோர்ட்டில் தாக்கல் செய்ய முடியாது. அந்த பத்திரத்தின் படி சொத்து சட்டப்படி கைமாறி இருக்காது.

37)  பத்திரப் பதிவு சட்டப்படி பதிவு செய்ய வேண்டிய சட்டக் கட்டாயம் இல்லை என்னும் பத்திரங்கள் அப்படியே செல்லும். அது பதிவு செய்யப்பட்ட பத்திரத்துக்கு முந்தி எழுதப்பட்டிருந்தால், அதுவே முந்தி நிற்கும்.

38)  ஒரு பத்திரத்தை பதிவுக்கு கொடுக்கும்போது, பதிவாளர் அன்றைய தேதி, நேரம், இடம் (பதிவு செய்யும் அலுவலம்) இவைகளை அந்தப் பத்திரத்தில் குறிக்க வேண்டும். பார்ட்டிகளின் கையெழுத்துச் சம்மதத்தைப் பெற்று, சாட்சிகள் அடையாளம் சொன்ன பின்னர் பதிவாளர் அந்த பத்திரத்தை பதிவு செய்து, அதற்கு ஒரு வரிசை எண் கொடுத்து, அதற்குறிய சான்றிதழ் அளிக்க வேண்டும். அவ்வாறு பதிவாளர் பதிவுச் சான்றிதழ் கொடுத்து விட்டால், அந்தப் பத்திரப் பதிவு பூர்த்தி ஆகி விட்டதாக சட்டம் கருதுகிறது.

39)  பதிவாளர், அங்கு பதிவு செய்ய பத்திரங்களை பார்வையிட பொதுமக்களை அனுமதிக்க வேண்டும். (புத்தகம்-1ல் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை மட்டும்).

40)  ஒரு பத்திரத்தில் பல இடங்களில் உள்ள சொத்துக்களை எழுதி இருந்தாலும், அந்த சொத்துக்களில் ஏதாவது ஒரு சொத்து இருக்கும் இடத்தில் உள்ள பதிவு அலுவலகத்தில் அந்தப் பத்திரத்தை பதிவு செய்யலாம். அந்த பதிவு விபரத்தை சம்மந்தப்பட்ட மற்ற பதிவு அலுவலகத்திற்கு “குறிப்பானை” அனுப்பி விட வேண்டும்.

41)  மாநில பதிவுத் துறை தலைமை அதிகாரி (IG of Registration) அந்த மாநிலத்தின் அவருக்கு கீழ் உள்ள எல்லாப் பதிவு அதிகாரிகளையும் மேற்பார்வையிட அதிகாரமுண்டு. ஏதாவது விதிமுறைகளை ஏற்படுத்தினால், அதை அரசுக்கு தெரிவித்து அரசிதழில் வெளியிடுட்டு நடைமுறைப்படுத்த அவருக்கு அதிகாரமுண்டு.

42)  ஒரு பதிவாளர், ஒரு பத்திரத்தை பதிவுக்கு மறுத்தால், அதன் காரணத்தை அவர் புத்தகம்-2ல் பதிவு செய்து கொண்டு, அதே காரணத்தை அந்தப் பத்திரத்திலும் எழுதி திரும்பக் கொடுத்து விட வேண்டும்.

43)  அவ்வாறு பதிவுக்கு மறுத்த பத்திரத்தின் உத்தரவின் மீது, 30 நாட்களுக்குள் மாவட்ட பதிவாளருக்கு அப்பீல் செய்து கொள்ளலாம். அங்கு அனுமதி கிடைத்தால், மீண்டும் அந்தப் பத்திரத்தை பதிவு செய்து கொள்ளலாம். அங்கு அனுமதி கிடைக்கவில்லை என்றால் சிவில் கோர்ட்டில் வழக்குப் போடலாம்.

44)  பத்திரங்களில், வேண்டுமென்றே தவறு செய்திருந்தால், பதிவாளர் அவர்மீது இந்திய தண்டனைச் சட்டப்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியும்.

45)  பதிவாளர், நல்லெண்ணத்தின் பேரில் தெரியாமல் செய்த தவறுகளுக்கு தண்டனை ஏதும் இல்லை.

46)  அரசு அதிகாரிகள், நீதிபதிகள், இவர்கள் எழுதிக் கொடுக்கும் பத்திரங்களின் பதிவுக்கு அவர்கள் நேரில் பதிவு அலுவலகம் வரத் தேவையில்லை.

**

 


No comments:

Post a Comment