Tuesday, January 5, 2021

இந்து கூட்டு குடும்ப சொத்து வழக்கு

 கோபார்சனரி சொத்து விற்பனை

ஒரு வழக்கை சென்னை ஐகோர்ட்டின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய முழு பெஞ்ச் விசாரனை நடத்தியது. அதில், தலைமை நீதிபதி அரனால்டு ஒயிட், மற்றும் நீதிபதிகள் பென்சன், மன்ரோ, சங்கரன் நாயர், கிருஷ்ணசாமி ஐயர் ஆகியோர் வாதங்களைக் கேட்டனர். அந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் மற்றும் வக்கீல் எத்திராஜ் முதலியார் இருவரும் வாதம் செய்து முடித்து விட்டார்கள். தீர்ப்பை நீதிபதி கிருஷ்ணசாமி ஐயர் எழுதி முடித்து இருந்தார். ஆனால் தீர்ப்பை கோர்ட்டில் சொல்லவில்லை. இந்த சூழ்நிலையில் திடீரென்று நீதிபதி கிருஷ்ணசாமி ஐயர் தன் நீதிபதி பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

மற்ற நான்கு நீதிபதிகளும் கோர்ட்டில் கூடினர். அப்போது அட்வகேட் ஜெனரல் ஒரு ஆட்சேபத்தை தெரிவித்தார். ஐந்து நீதிபதிகள் விசாரித்த இந்த வழக்கை ஒரு நீதிபதி விலகி விட்டதால், நான்கு நீதிபதிகள் சேர்ந்து அதே தீர்ப்பைச் சொல்லமுடியுமா என்று கேள்வி எழுப்பினார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான்கு நீதிபதிகள் சேர்ந்து அந்த தீர்ப்பைச் சொல்லலாம் என்று முடிவுக்கு வருகிறார்கள்.

எனவே நான்கு நீதிபதிகள் மட்டும் தீர்ப்பைச் சொல்கிறார்கள்:

தலைமை நீதிபதி அரனால்டு ஒயிட்:

பிரைவி கவுன்சில் வழக்கான Suraj Bunsi Koer v. Sheo Persad Singh (1880) ILR 5 Cal. 148 (PC) என்ற ஒரு வழக்கில் இந்து கூட்டுக் குடும்பச் சொத்தில், ஒரே ஒரு பங்குதாரர் (கோபார்சனர்) மட்டும் அவருடைய பங்கை மட்டும் (சொத்தை) விற்று விடுகிறார். இப்படி விற்க அவருக்கு சட்டத்தில் அனுமதி உண்டா என்ற கேள்வி எழுகிறது. கூட்டுச் சொத்தாக இருக்கும்போது, ஒருவர் மட்டும் அவரின் பங்கை பிரிக்காமல் விற்பனை செய்ய முடியுமா முடியாதா என்ற கேள்வி. இது ஒன்றும் இயற்கைக்கு மாறானது இல்லை என முடிவாகிறது.

இதேபோன்ற கேள்வி 1891-ல் ஒரு வழக்கில் முழு பெஞ்ச் விசாரனைக்கு வருகிறது. Rangasami v. Krishnayyan (1891) ILR 11 Mad 408 (FB). அதில், அப்படி ஒருவர் மட்டும் தன் பங்கை விற்று விட்டால், அதை வாங்கியவர், அந்த விற்றவரின் நிலையில் அந்தக் கூட்டுக் குடும்பத்தில் இருப்பார். அதனால் அவரை (அந்த பங்கை வாங்கிய மூன்றாம் நபரை) கூட்டுக் குடும்ப உறுப்பினராக ஏற்றுக் கொள்ள முடியுமா, அல்லது மற்று கூட்டுக் குடும்ப உறுப்பினர்கள் அவரை கலந்து கொண்டு சொத்தை கூட்டாக அனுபவிக்க முடியுமா? அந்த பாகத்தை மட்டும் அவர் பாகம் பிரித்து அவர் பங்கை எடுத்துக் கொள்ளும்வரை, அந்த சொத்தின் பங்கு மட்டும் விற்கப் படாத பங்கு போலவே இருக்கும். ஒருவேளை மற்ற கோபாசனர்களில் ஒருவர் இல்லாமல் போய் விட்டாலும், அந்த கூட்டுக் குடும்பச் சொத்தில் பங்கில் மாறுதல்கள் ஏற்படும். அப்போது வாங்கியவரின் பங்கின் நிலை என்ன? வாங்கியர், அதை விற்றவருக்கு அவ்வாறு கிடைக்கும் பங்கை, அது அதிகமாக இருந்தாலும், அல்லது குறைவாக இருந்தாலும், ஏற்றுக் கொள்ள முடியுமா? இது ஒரு Speculative transaction என்னும் சூதாட்டம் போல, அதிகம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. ஒன்றும் கிடைக்காமல் போகவும் வாய்ப்புள்ளது. ஏனென்றால், இந்து கூட்டுக் குடும்பச் சொத்தில், பாகம் பிரிக்கும் போதுதான், உயிருடன் இருக்கும் கோபார்சனர்கள் என்னும் கூட்டு உரிமையாளர்கள் பங்கு எவ்வளவு என்று நிர்ணயிக்கப் படும். அதுவரை ஒரு கோபார்சனரிடம் அவரின் முடிவாகாத பங்கை வாங்கியவர் காத்திருக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. 

இந்த நிலையானது perfectly logical and intelligible position. ஆனால் இந்த நிலையை முழுபெஞ்ச் ஒப்புக் கொள்ளவில்லை. அந்த முழு பெஞ்சின் நிலை என்னவென்றால்: “அதை வாங்கியர், தான் வாங்கிய பங்கை அடைய வேண்டுமென்றால், அவர் பாக  வழக்குப் போட்டால், அது முடிவாகி விடும்.” ஆனால் மற்ற நீதிபதிகள் இதை ஒப்புக் கொள்ளவில்லை. கோபார்சனர்களின் உரிமையானது பாகம் பிரிக்கும் வரை யாருக்கு எவ்வளவு பங்கு என்று முடிவாகாத நிலையிலேயே இருக்கும். ஒருவர் இறந்து விட்டாலும், பங்கு அதிகமாகும். புதிதாக ஒருவர் அந்தக் கூட்டுக் குடும்பத்தில் பிறந்தால், அவரவர் பங்கு குறைவாகும். 

ஒருவேளை, இந்த பங்கை விற்ற கோபார்சனர் இறந்து விட்டால், அவருக்கு பங்கு இல்லாமலேயே போய்விடும். அப்போது வாங்கியவரின் நிலை என்னவாகும். ஒன்றும் கிடைக்காது. 

இன்னொறு கருத்தாக: ஒரு கோபார்சனர் அவரின் பங்கை விற்று விட்டால், அவர் இறப்பு, வாங்கியவரைப் பாதிக்காது. அவர் கிரயம் வாங்கியபோது, அதை விற்றவருக்கு என்ன உரிமை இருந்ததோ அதை வாங்கியவர் அடையலாம். ஏனென்றால், கிரயத்தின் போதே, சொத்தின் உரிமை மாறி விட்டாதால், விற்றவர் இறப்பு அதைப் பாதிக்காது.

மற்றொரு வழக்கான 1902-ல் நடந்த Aiyyagari Venkataramayya v. Aiyyagari Ramayya (1902) ILR 25 Mad. 690 (FB) என்ற வழக்கில்: சொத்தை விற்றவரின் பங்கானது, அவர் விற்ற பின்னர் இறந்து விட்டால், வாங்கியவரை அது பாதிக்காது என்று கூறப்பட்டுள்ளது. 

எனவே விற்பனை செய்தது செல்லும் என்று தலைமை நீதிபதியின் தீர்ப்பு.

நீதிபதி பென்சான்:

இவரும் இதே கருத்தையே சொல்கிறார். பிரைவி கவுன்சில் வழக்கான Haridi Narain Sahu v. Ruder Perkash Misser (1884) ILR 10 Cal 262 (PC) வழக்கில் முடிவு செய்யப்பட்டிருப்பதை ஒப்புக் கொள்கிறார். இந்த வழக்கில், கடன் கொடுத்த ஒருவர், கூட்டுக் குடும்பச் சொத்தின் தகப்பனார் வாங்கிய கடன் பணத்துக்கான டிகிரி வாங்கி, இந்த கூட்டுக் குடும்பச் சொத்தை ஜப்தி உத்தரவு பெறுகிறார். அதை ஏலவிற்பனை செய்ய மனுச் செய்கிறார். அவரே அந்த சொத்தை ஏலத்தில் அந்த தகப்பனின் பங்கைவாங்கி விடுகிறார். அந்த தகப்பனுக்கு ஒரு மைனர் மகன் இருக்கிறான். அவனுக்கும் இந்த கூட்டுக் குடும்பச் சொத்தில் பங்கு உள்ளது. மகன் தனியே வழக்குப் போட்டு மொத்த சொத்தையும் கேட்கிறான். ஏனென்றால் கூட்டு சொத்தை பாகம் பிரிக்காமல் விற்க முடியாது என்பது அவன் வாதம். இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே, அந்த தகப்பனுக்கு இன்னொரு மகன் பிறந்து விடுகிறான். எனவே இப்போது பங்கு பாதி பாதி என்று இருந்தது குறைந்து, ஆளுக்கு மூன்றில் ஒரு பங்கு ஆகி விட்டது. ஐகோர்ட்டில், ஏலத்தில் சொத்தை வாங்கியவருக்கு மூன்றில் ஒரு பங்கு என்று தீர்ப்பாகிறது. இப்போது வழக்கு பிரைவி கவுன்சிலுக்கு வந்து விட்டது. அங்கு பாகப் பிரிவினை வழக்குப் போட்ட பின்னர் மகன் பிறந்தாலும் பாகம் பாதிக்காது என்றும், சொத்தை வாங்கியவரின் பங்கான பாதி பங்கு பெற உரிமை உள்ளது என பிரைவி கவுன்சில் சொல்லி விட்டது.

**

No comments:

Post a Comment